

தமிழகத்தின் கல்லீரலை எப்படி மது கருக்கிக்கொண்டிருக்கிறது என்பதை ‘தி இந்து’ வெளியிட்ட ‘கதறுகிறது தமிழகத்தின் கல்லீரல்’ பிரத்யேகச் செய்தி சொன்னது. அதைவிட நமக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது மது மரணங்கள்.
மது பாதிப்பு தொடர்பாக நம்முடைய செய்தியாளர்களும் நாம் நியமித்த பிரத்யேகக் குழுவினரும் மேற்கொண்ட ஆய்வில், திடுக்கிடவைக்கும் அளவுக்குத் தமிழகத்தில் மது மரணங்கள் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. ஏராளமான இளம் விதவைகள் உருவாகியிருக்கின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் நிலைமை படுமோசம்.
தமிழகத்தின் கிராமப்புறங்கள் மதுப் பழக்கத்தால் எப்படித் தத்தளிக்கின்றன என்பதற்கான ஒரு துளி உதாரணம், கடலூர் மாவட்டம் கச்சிராயநத்தம் கிராமம். “இந்தச் சின்ன கிராமத்திலிருக்கும் 450 குடும்பங்களில் 105 பெண்கள் கணவரை இழந்திருக்கிறார்கள். பெரும்பாலானோரின் மரணங்களுக்குக் காரணம் மது” என்கிறார்கள். இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியோடு நாம் அங்கே சென்றபோது, அங்குள்ள ஒரு தெருவின் நிலைமையே நம்மை நிலைகுலைய வைத்தது.
ரஞ்சிதா - ராமச்சந்திரன், லட்சுமி - கந்தசாமி, ஜெயலட்சுமி - ஆதிமூலம், ஜெயலலிதா - பாண்டுரங்கன், ஆதிலட்சுமி - பழமலை, முத்துலட்சுமி -மகாதேவன், மலர்க்கொடி - சசிகுமார், கலாமணி - கோதண்டராமன், மந்திரிகுமாரி - செந்தில்குமார், ஜெயந்தி - ராஜ்குமார், தமயேந்தி - தேவநாதன், செல்வகுமாரி - கல்யாணசுந்தரம், வளர்மதி- வெங்கடேசன்,செல்வி - வெங்கடேசன். இந்தத் தம்பதியரில் ஒரு பெண்ணுக்குக்கூட கணவர் இல்லை. காரணம், மது. தற்போது இந்தக் கிராமத்தில் இயங்கிய மதுக் கடை மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், அதற்கும் தனியாக இரு பெண்கள் உயிர்த் தியாகம் தேவைப்பட்டிருக்கிறது. கடைசியில் கிராமமே முற்றுகையிட்டதன் விளைவாகக் கடை மூடப்பட்டது.
இங்குள்ள பெண்களின் கதையைக் கேட்கவே நம்மால் முடியவில்லை. பேச ஆரம்பிக்கும் முன்னரே கதற ஆரம்பித்துவிடுகிறார்கள். “நம்மூர்லதான் அரசாங்கம் ஏழைப் பொண்ணுங்க கல்யாணத்துக்குன்னு அரை பவுன் தாலி தருது. ஆனா, இந்த ‘டாஸ்மாக்’ கடைங்க அந்தத் தாலியை அறுத்துடுதே… ஐயோ! என் மவராசன் போயிட்டாரே... என் வாழ்க்கையே போச்சே… நான் என்ன பண்ணுவேன்… என்ன பண்ணுவேன்?” என்று அடித்துக்கொண்டு அழும் முத்துலட்சுமி... “கல்யாணமாயி ஒன்றரை வருசம்கூட ஆகல... அது இருந்தப்பவும் நிம்மதி இல்ல, தினமும் குடிச்சிட்டு வந்து அடிக்கும். செத்த பிறகும் நிம்மதி இல்ல.
இப்ப நான் பைத்தியக்காரி மாதிரி திரியறேன்” என்று கதறும் மந்திரிகுமாரி... “குடிச்சே அது செத்துப்போச்சு. எம் புள்ளைக்காகதாம் வாழ்ந்தேன். இப்ப அவனும் 15 வயசுலயே குடிக்கிறான். ஐயோ, எங்கதைய எங்கே சொல்லி அழுவேன்” என்று கலங்கும் ஜெயந்தி… இதையெல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை.
கதைகள் கச்சிராயநத்தத்தோடு முடியவில்லை. இன்னும், காரைக்குடி அருகேயுள்ள புதுவயல், திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டி என்று வரிசையாக நீள்கின்றன.
இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமே இல்லை என்கிறார்கள் மருத்துவர்களும் களப் பணியாளர்களும்.
“உலக அளவில் அதிகமான குடிநோயாளிகள் இருக்கும் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுவிட்டது. இந்தியாவில் மது குடிப்பவர்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. இந்தியாவில் ஏழை மக்கள் வாரத்துக்கு 2.5 - 3.5 லிட்டர்; நடுத்தர மக்கள் வாரத்துக்கு 1.5 - 2 லிட்டர்; மேல்தட்டு மக்கள் வாரத்துக்கு 0.75 - 1 லிட்டர் வரை மது அருந்துகின்றனர்.
ஆனால், இந்த அளவு தமிழகத்தில் இரு மடங்காக இருக்கிறது. இவ்வளவு மோசமாக மது உள்ளே செல்லும்போது, பாதிப்புகளும் அதற்கேற்பத்தானே இருக்கும்? ஒரு முறையான ஆய்வை மேற்கொண்டால், மிகப் பெரிய அதிர்ச்சிக்கு நாம் ஆளோவோம். அவ்வளவு கொடூரமாகச் சூறையாடிக்கொண்டிருக்கிறது மது” என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதார சங்கத் தலைவரும் மருத்துவருமான எஸ்.இளங்கோ. “தமிழகத்தில் 1.32 கோடிப் பேர் மது அருந்துகின்றனர். 2001-ல் நாங்கள் எடுத்த ஓர் ஆய்வில் மது குடிப்போரின் சராசரி வயது 40. அதுவே 2014-ல் 20 வயதாகிவிட்டது. மாதம் 40 புதிய குடிநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
தவிர, 20 பேர் சிகிச்சை பெறுவதற்காக முன்பதிவு செய்கின்றனர்” என்கிறார் திண்டுக்கல்லைச் சேர்ந்த போதை அடிமை மீட்பு மறுவாழ்வு மைய இயக்குநர் கே.ரத்தினம்.
எப்போது மீளும் தமிழகம்?