Published : 27 Sep 2019 07:45 AM
Last Updated : 27 Sep 2019 07:45 AM

அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலரா... அரசாங்கத்தின் பாதுகாவலரா? 

கௌதம் பாட்டியா

நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது, அடிப்படை உரிமைகளுக்காக நடந்த வழக்கில் ‘சுதந்திரத்தின் வற்றாத கனிகளை ஏராளமானோருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, சிலருக்கான சுதந்திரம் தற்காலிகமாக மறுக்கப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. நிர்வாகத் தலைமைக்கு ‘மேலாதிக்க உரிமை’ உண்டு என்பதை ஏற்கும் விதத்தில் தெரிவிக்கப்பட்ட இக்கருத்தை, ‘ஆட்கொணர்வு வழக்கின் தீர்ப்பு’ (ஹேபியஸ் கார்பஸ்) என்று குறிப்பிடுவர்.

‘ஆபத்தான காலத்தில் அரசின் நன்மை கருதி, மக்களுடைய உரிமைகளை அந்த நன்மைக்கு உட்பட்டதாகக் கருத வேண்டும்’ என்பது கொள்கை. எது ஆபத்தான காலம்? அதை அரசு முடிவுசெய்யும்; யாருடைய உரிமைகள் கட்டுப்படுத்தப்படும், எப்படி? அதை அரசு முடிவுசெய்யும்; சுதந்திர உரிமைகள் எப்போது திருப்பி அளிக்கப்படும்? அதை அரசு முடிவுசெய்யும்; அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற அனுமானத்தின் பேரில் உச்ச நீதிமன்றம் (இந்த உரிமைகள் வழக்கில்) நடந்துகொள்ள வேண்டும் என்றது நீதித் துறை.

நீதித் துறையின் இருண்ட காலம்

உச்ச நீதிமன்றம் எடுத்த நிலை எவ்வளவு தவறானது என்பது விரைவிலேயே தெரியவந்தது. நெருக்கடிநிலை விலக்கிக்கொள்ளப்பட்டவுடன், அரசு செய்த ‘சட்டத்துக்குப் புறம்பான’ பல செயல்கள் அம்பலமாயின. ‘மிதமிஞ்சிய அதிகாரம், மிதமிஞ்சிய தவறுகளுக்கே வழிவகுக்கும்’ என்பதை அவை நினைவூட்டின. நம்முடைய குடியரசு அரசமைப்புச் சட்டம் நிர்வாக முறைக்குப் பல கட்டுப்பாடுகளையும் வரம்புகளையும் கொண்டது. அரசு, தான் எடுக்கும் முடிவுகளுக்கும் செய்யும் செயல்களுக்கும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டது. மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீது அரசின் செயல்கள் குறுக்கிடும்போது, அரசு பதில் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம் மூலம்தான் கேட்க முடியும்.

‘ஆட்கொணர்வு வழக்கின் தீர்ப்பு’ இந்தக் கொள்கைக்குத் துரோகம் விளைவித்தது. உச்ச நீதிமன்ற வரலாற்றின் ‘இருண்ட காலம்’ என்று அது அழைக்கப்பட்டது. இனி, இத்தகைய நிலை மீண்டும் வராமலிருக்க வெகு ஆழத்தில் இது புதைக்கப்பட வேண்டும் என்றது நீதித் துறை. அதற்குப் பதிலாக நோக்கத்துக்கும் செயலுக்கும் பொருத்தமான விகிதாச்சாரம் இருக்க வேண்டும் என்றது. மிகப் பெரிய லட்சியத்துக்காக மக்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காலிகமாக நிறுத்துவது அல்லது முடக்குவது அவசியம் என்றால், தன்னுடைய நோக்கத்துக்கும் செயலுக்கும் பொருத்தப்பாடு இருப்பதை அது நிரூபிக்க வேண்டும் என்றது. மிகவும் அவசியம் என்றாலும்கூட இத்தகைய உரிமை மறுப்புகள் மிகவும் குறைந்தபட்ச அளவிலேயே இருக்க வேண்டும் என்றது.

அரசின் நடவடிக்கைகள் அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கதா என்பதை நீதிமன்றங்களில்தான் சோதித்துப்பார்க்க வேண்டும். ஆட்கொணர்வு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி எச்.ஆர்.கன்னா, “ஆர்வக் கோளாறால் சிலர் நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு ‘சட்டப்படியான ஆட்சி’ என்ற கொள்கைக்கு மாறாக மக்களுடைய அடிப்படை உரிமைகளில் செய்யும் ஆக்கிரமிப்புகள் மிகவும் ஆபத்தானவை” என்று எச்சரித்திருக்கிறார்.

2019-ல் ஆட்கொணர்வு வழக்கு

இந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் தகவல்தொடர்புகளை மேற்கொள்ள முடியாமல் முழுவதும் முடக்கப்பட்ட நிலைக்கு ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கொண்டுவரப்பட்டது. அரசியல் தலைவர்களும், எண்ணிக்கை தெரியாத அளவுக்குத் தனிநபர்களும் விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தகவல்தொடர்புகளை முடக்குவது அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதாகும். மாநிலத்துக்கு வெளியே வசிப்போர் தங்களுடைய குடும்பங்களுடன் தொடர்புகொள்ள முடியாமலும், வெளிச்சத்துக்கே வராத உரிமை மீறல் செயல்களை அம்பலப்படுத்த முடியாமலும் அரசால் திரைபோட்டு மறைக்க உதவுகின்றன. அத்துடன் அனைத்து வகை அடித்தளக் கட்டமைப்புகளையும் சேதப்படுத்துகின்றன.

சுகாதாரம், உணவு, போக்குவரத்து, மருத்துவம் ஆகிய அனைத்தையும் பெற முடியாமல் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. விசாரணையின்றி சிறையில் அடைப்பது தனிநபர் உரிமையை அப்பட்டமாக மீறுகிறது. இப்படி சமூக ஊடகங்களையும் இணையதளங்களையும் முடக்கிவைப்பதால் வன்முறையைத் தவிர்த்துவிடலாம் என்பதற்குச் சமீபத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக, இப்படி முடக்குவதால் வதந்திகள் பெருகி, மக்கள் அதனால் உணர்ச்சிவசப்பட்டு வன்செயல்கள் அதிகரித்ததற்கே சான்றுகள் அதிகம் இருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத் தேவைக்கேற்ப இந்த உரிமை முடக்க நடவடிக்கைகள் இருந்தனவா என்று பார்க்க வேண்டும். ஆனால், இதில் சில கேள்விகளுக்கு விடை அவசியம். ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை தொடர்பாக மக்கள் தங்களுக்குள் கடுமையாக விவாதித்தனர். செய்தித்தாள்களில் கட்டுரைகள், தலையங்கங்கள் எழுதப்பட்டன, ஊடகங்களில் விவாதித்தனர், பலரும் நேர்காணல்கள் மூலம் தங்களுடைய கருத்துகளைப் பதிவுசெய்தனர், ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில்கூட இந்த விவகாரம் பேசப்பட்டது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் இது தொடர்பான விவாதங்களே நடக்கவில்லை - அது இந்நாட்டின் நீதிமன்றங்கள்.

நீதிமன்றங்களின் மௌனம்

நெருக்கடிநிலை காலத்தில் நடந்ததைப் போல ‘அரசின் நடவடிக்கை சரிதான்’ என்று நீதிமன்றங்கள் இதுவரையில் கூறிவிடவில்லை. அதேசமயம், இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிப்பதையே தள்ளிப்போட்டன, தவிர்க்கப் பார்த்தன, தப்பித்தன, பதுங்கின. ஷா பெசல் என்ற அரசியல் தலைவர் தன்னைக் கைதுசெய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் இருமுறை ஒத்திவைத்தது (ஒருமுறை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வரவில்லை).

உச்ச நீதிமன்றத்தில் இதைவிட மெச்சிக்கொள்ளும்படி எதுவும் நடந்துவிடவில்லை. இணையதளம் உள்ளிட்ட தகவல்தொடர்பு முடக்கம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டன. முதல் முறை, ‘அரசுக்குச் சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்’ என்ற கருத்துரையோடு ஒத்திவைக்கப்பட்டது. நெருக்கடிநிலைக் காலத்தில் ஆட்கொணர்வு மனு மீதான கருத்தின் எதிரொலிபோலவே இது இருந்தது. செப்டம்பர் 16-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும்போது, உரிமைகள் முடக்கப்பட்டு 40 நாட்களாகியிருக்கும். பேச்சுரிமை, கருத்துரிமை மீதான தாக்குதல்களைப் பற்றி மௌனம் சாதித்துவிட்டு, ஆட்கொணர்வு மனுவுக்கான உரிமை தொடர்பான மனுவை முதலில் விசாரணைக்கு ஏற்றது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தான் செய்தது நியாயம்தான் என்று நிரூபிக்குமாறு அரசைக் கேட்பதற்குப் பதிலாக, மனுதாரர்கள் காஷ்மீர் செல்லவும் அங்கே தடுப்புக் காவலில் இருந்த சிலரைச் சந்திக்கவும் அனுமதி தந்தது.

நம்முடைய அரசமைப்புச் சட்ட முறைப்படி, நாடு முழுவதும் செல்வதற்கு நீதிமன்றத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமே இல்லை. இப்படி அனுமதி தந்ததன் மூலம், கைது தொடர்பாகத் தன்னுடைய கருத்து என்ன என்பதைத் தெரிவிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம். தனிநபர்களைப் பொறுத்தவரை தற்காலிகமான சமரச ஏற்பாட்டை அது நாடியது. தகவல்தொடர்பு முடக்கப்பட்டது, விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டது குறித்து அரசியல் சட்டப்படி தான் செய்ய வேண்டிய கடமையை அது செய்யவில்லை. நீதித் துறையின் இந்த நழுவலால் மாநிலத்தில் அதே நிலைமை நீடிக்கிறது.

தன் முன்னுள்ள வழக்கு தொடர்பாக ஆணை எதையும் பிறப்பிக்காததன் மூலம் மக்களுடைய அடிப்படை உரிமைகள் மீதான ஆக்கிரமிப்பை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. தன்னுடைய செயலை விளக்க வேண்டிய அரசாங்கத்தை அந்தப் பொறுப்பிலிருந்து விலக்கிவிட்டது. பதில் சொல்லக் கடமைப்பட்ட அரசு பதில் சொல்லாமல் தப்ப முடிந்திருக்கிறது. இது நீதித் துறையை விட நிர்வாகத் துறைதான் மேலாதிக்கம் மிகுந்தது என்பதை ரகசியமாக வலியுறுத்தும் செயலாகும். மக்களுடைய உரிமைகளுக்கு சார்பாக நிற்க வேண்டிய நீதித் துறை, களத்தை விட்டு விலகிவிட்டது, அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய தன் பணியைச் செய்யாமல் நகர்ந்துவிட்டது.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x