Published : 19 Jul 2015 03:14 PM
Last Updated : 19 Jul 2015 03:14 PM

பாலாறு பிறந்த வரலாறு

பாலாறு - அவலத்தை அலசும் தொடர்

மனிதனுக்கு இயற்கை கற்றுக்கொடுத்த பாடங்கள் ஏராளம். அந்த வகையில் குன்றாத வளத்தைக் அள்ளிக்கொடுத்த ஒரு ஜீவநதியாக பாலாறு இருந்துள்ளது. பொன்னாய் படர்ந்திருக்கும் மணலுக்கு கீழே வற்றாத நதியாக பாலாறு இன்றும் ஓடி மக்களின் தாகத்தை தணிக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்திக்கு மூலகாரணியும் இதே பாலாறுதான்.

லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை பசுமையாக்கிய பாலாறு இன்று தனது அடையாளத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறது. பொங்கும் நுரையுடன் புது வெள்ளமாய் கரைகளைத் தொட்டு பாய்ந்த நீரின் ஆர்ப்பரிப்பை இனி எப்போதும் கேட்க முடியாது. ஏரிகளுக்கு நீர் சுமந்து வந்த கால்வாய்கள் காணாமல் போய்விட்டன. உலகில் மாசுபட்ட நதியாக மாறிவிட்ட பாலாற்றின் சோகமான வரலாற்றுப் பதிவுதான் இந்த தொடர். இதற்காக பாலாறு உற்பத்தியாகும் நந்திதுர்கத்தில் இருந்து 'தி இந்து' தனது பயணத்தை தொடங்கியது.

பாலாற்றின் பிறப்பிடம் கர்நாடக மாநில நந்திதுர்கம். அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என 348 கி.மீ. தூரம் தடம் பதித்த பாலாறு காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

பாலாறு பிறந்த நந்திதுர்கம்

கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திதுர்கம் மலை பாலாற்றின் பிறப்பிடம். கடல் மட்டத்தில் இருந்து 4,851 அடி உயரமுள்ளது. பெங்களூருவில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் இருக்கும் மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம். பாலாறு, வடபெண்ணை, தென்பெண்ணை, சித்ராவதி, அரக்காவதி, பாப்னாகி என 6 நதிகளின் பிறப்பிட மும் நந்திதுர்கம்தான்.

முன்னொரு காலத்தில் குஷ்மந்தகிரி என்று அழைக்கப்பட்ட நந்திமலையை, சோழர்கள் ஆட்சிக் காலத்தில் அனந்தகிரி என்று அழைத்துள்ளனர். சிவனின் வாகனமான நந்தியின் தோற்றத்துடன் இருந்த அனந்தகிரி மலை பிற்காலத்தில் நந்திதுர்கமாக பெயர் மாறியது. அடர்ந்த வனப் பகுதியாக இல்லாமல் சாதாரணமாக பசுமை நிறைந்த மலையாக நந்திதுர்கம் இருப்பது ஆச்சரியம். அடிவாரத்தில் இருந்து மலையை நோக்கிய நந்தி சிலைதான் நந்திதுர்கத்துக்கு செல்லும் வழிகாட்டியாக இருக்கிறது.

வறண்டுபோன ஊற்று

நெல்லிக்காய் பசவன்னா சிலைக்கு அருகில் பிரம்மாசிரமம். அதற்கு சற்று தூரத்தில் பாலாறின் நதி மூலம் இருக்கிறது. 4,800 அடி உயரத்தில் இருக்கும் இந்த ஊற்றில் பொங்கி வரும் பாலாற்றுக்கு கல் மண்டபம் கட்டியுள்ளனர். இது இன்று பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த அடையாளமும் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது.

ஊற்றில் பொங்கிப் பெருக்கெடுத்த பாலாறு மலை அடிவாரத்தை நோக்கி ஓடைகளாய் பாய்கிறது. பெரிய அளவிலான ஓடைகள் இல்லாவிட்டாலும், சிறு சிறு ஓடைகள் அருகில் இருக்கும் தாழ்வான பகுதியை நோக்கி ஓடுகிறது.

கோடை வாசஸ்தலம் என்ற சுற்றுலா அடையாளத்தால் வேகமாய் வளர்ந்துவரும் கான்கிரீட் கட்டிடங்களால் நந்தி துர்கத்தின் அடையாளங்கள் சிதைந்து கொண்டிருக்கிறது. கூடவே பாலாற்றின் மூலமும்தான்.

திப்பு சுல்தானின் ஓய்வுக் கோட்டை

மராத்திய மன்னர் மாதவராவிடம் இருந்து 1770-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த நந்திதுர்கம் திப்புவின் கோடை கால ஓய்வுக்கும், வேட்டையாடும் இடமாக இருந்துள்ளது. மிக உயர்ந்த மலைகளில் பலம் நிறைந்த கோட்டைகளை கட்டி வைத்திருந்த திப்பு சுல்தான், நந்திதுர்கத்தையும் தனது ராணுவ பலத்தை நிரூபிக்கும் கோட்டையாக மாற்றினார்.

மலையின் உச்சியில் திப்பு சுல்தான் ஓய்வெடுக்க 12 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலத்துடன் கூடிய சிறிய மாளிகை இருக்கிறது. சாதாரண மாடி வீட்டைப்போல காட்சியளிக்கும் இங்கிருந்து மலையின் அடிவாரத்தில் வருபவர்களை பார்க்க முடியும்.

கடுமையான குற்றங்கள் புரிந்தவர்கள் நந்தி மலையின் உச்சியில் இருந்து கீழே தள்ளி மரண தண்டனையை நிறை வேற்றிய இடம்தான் தற்போது திப்பு முனை என்றழைக்கப் படுகிறது. இந்த பகுதியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கின்றனர். மலையடிவாரத்தில் பதுங்கியிருக்கும் எதிரிகளை துப்பாக்கியால் சுடுவதற்கு, பலம்மிக்க மதில்களில் துவாரங்கள் வைத்து கட்டியிருப்பது திப்புவின் ராணுவ மதிநுட்பத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

யோக நந்தீஸ்வரர் கோயில்

மலை உச்சியின் ஒரு பகுதியில் இருக்கும் யோக நந்தீஸ்வரர் கோயில் 9-ம் நூற்றாண்டில் பாணர்கள் காலத்தில் கட்டியது. 11-ம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சியில் கோயில் கோபுர மண்டபமும், பின்னாளில் வந்த ஹொய்சாலர்கள், விஜயநகர பேரரசுகள் ஆட்சிக் காலங்களில் கூடுதல் மண்டபம், சதுர வடிவ குளம் ஆகியவை வரலாற்றை நினைவூட்டுகின்றன.

நெல்லிக்காய் பசவன்னா

நந்திதுர்கத்தின் மற்றொரு அழகு நெல்லிக்காய் பசவன்னா (நந்தி). 6 அடி உயரம் 10 அடி நீளமுள்ள நந்தி சிலை, மலையில் இருந்து நிலத்தை நோக்கிப் பார்ப்பது கம்பீரத்தின் அழகு. நந்திதுர்கத்தின் காவல் தெய்வமாக காட்சியளிக்கும் பசவன்னாவுக்கு விசேஷ நாட்களில் வெண்ணைக் காப்பு சாற்றப்படும். விஜயநகர பேரரசு ஆட்சியில், கெம்பே கவுடாவால் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

*

பெரிய புராணத்தில் பாலாறு

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்'என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.

'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்

பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே

அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்

பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' - 1098

(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானாது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு).

பாலாறு பயணிக்கும்...







படங்கள்: வி.எம்.மணிநாதன்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x