மோடி 365° - மோடியின் முதலாண்டு எப்படி?- பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரம்

மோடி 365° - மோடியின் முதலாண்டு எப்படி?- பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரம்
Updated on
2 min read

வெளியுறவில் வெகு மும்முரமாகச் செயல்பட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு, நரேந்திர மோடி அவரது முன்னவர் மன்மோகன் சிங் ஒருமுறை சொன்னதுபோல இந்த முடிவுக்கு வரக்கூடும்: “இந்தியா சிறப்பாகச் செயல்பட வேண்டு மென்று உலகம் எதிர்பார்க்கிறது. ஆனால், நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களெல்லாம் நமது தாயகத்தில்தான் இருக்கின்றன.”

சர்வதேச உறவுகளையும் வெளியுறவுக் கொள்கையையும் இப்படிப் பார்ப்பது இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்து மதிப்பிட உதவுகிறது. சர்வதேச உறவு என்பதை ‘அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு’ (அ-அ-உ), ‘மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு’ (ம-ம-உ), ‘தொழில் துறைக்கும் தொழில் துறைக்கும் இடையிலான உறவு’ (தொ-தொ-உ) என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதை இந்த மூன்று வகைகளைக் கொண்டு மதிப்பிடலாம். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு இந்த 3 பிரிவுகளிலும் உச்சத்தில் இருக்கிறது. முன்பு ரஷ்யாவுடன் இப்படிப்பட்ட உறவில் இந்தியா இருந்தது. 1970-களில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நெருக்கமான அ.அ. உறவு இருந்தபோது, இந்த மூன்று பிரிவுகளிலுமே சோவியத் ஒன்றியம் உச்சத்தில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலும் அ.அ. உறவு நன்றாக இருந்தாலும் தொ.தொ.உறவும் ம.ம. உறவும் தொடர்ந்து சரிவுக்குள்ளாயின. 1962-க்குப் பிறகு சீனாவுடன் 3 பிரிவுகளிலும் உறவு மிகவும் மோசமடைய ஆரம்பித்தது. கடந்த இரண்டு தசாப்தங்களிலும் அ.அ. உறவில் முன்னேற்றமடைய ஆரம்பித்தது. ஆனால், தொ.தொ. உறவில் ஏற்பட்ட படுவேகமான ஏற்றத்தால் மற்ற இரண்டு பிரிவுகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆசியாவின் புவியரசியலில் சீனாவின் நிலைகுறித்தும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படுவதுகுறித்தும் இந்தியா சங்கட உணர்வின்றி இருக்கும்போதுதான் இந்தியா வுக்கும் சீனாவுக்கும் இடையிலான அ.அ. உறவு மேம்படும். இதைக் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்க்கும்போது, இந்திய-சீன உறவில் தொ.தொ. உறவும் ம.ம. உறவும் முதலில் மேம்படட்டும்; அதன் மூலம் இருதரப்பு உறவில் பெருமளவு நம்பிக்கை ஏற்படும் என்று நினைத்து, எல்லைப் பிரச்சினை கொஞ்ச காலம் காத்திருக்கட்டும் என்று மோடி முடிவுசெய்ததுபோல் தோன்றுகிறது.

இந்தியப் பொருளாதார மேம்பாட்டுக்கான களத்தை விரிவுபடுத்துவதும், அதற்கேற்ற பிராந்தியச் சூழ்நிலையை ஏற்படுத்துவதும் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் என்பதால், பரஸ்பரத் தன்மையற்ற ‘ஒருதரப்பு தாராளமய மாக்கல்’ என்ற அணுகுமுறையை சீனாவிடம் மோடி மேற்கொண்டார். கடந்த காலத்தில் இந்த அணுகுமுறை ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இருந்த வளர்ச்சியடையாத நாடுகளிடையே மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. நல்லுறவு ஏற்படும் வகையில், பரஸ்பரம் நன்மை தரும் விதத்தில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் நிலையையும் அமைப்பு களையும் உருவாக்குவதே இந்தக் கொள்கையின் நோக்கம்.

மோடியின் நிர்வாகத்தையும் அவரது பொருளாதாரக் கொள்கையையும் பற்றி நேரெதிர்க் கருத்துகள் நிலவுகின்றன. அவரது விமர்சகர்கள் மதப் பிரிவினைவாதம், விவசாயிகளின் துயரம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அவரது ஆராதகர்களோ ஓரங்கட்டப்பட்ட ஒரு மேட்டிமைக்குழுவின் குற்றச்சாட்டுகளாகவே இவற்றைப் பார்க்கிறார்கள். உள்நாட்டுக் களத்தில் மோடியின் செயல்பாடுகளில் நன்மை தீமை இரண்டுமே கலந்து காணப்படுகின்றன. பொருளா தாரத்தில் முன்பைவிட நிச்சயம் முன்னேற்றம் காணப்படுகிறது. ‘இந்தியாவில் தயாரியுங்கள்’ என்பதற்குப் பதிலாக, ‘தூய்மை இந்தியா’ பிரச்சாரத்தைப் போலவே, ‘இந்தியாவில் தயாரித்து இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற கோஷத்துடன் ‘தேசத்தைக் கட்டமைப்போம்’ என்ற அறைகூவலை விடுத் திருந்தால் பிரதமரும் பொருளாதாரத்துடன் தொடர்புடைய அவரது அமைச்சர்களும் இன்னும் விரிவாகச் செயல் படுவதற்கான அரசியல் களம் கிடைத்திருக்கும்.

முதலீடு, சேமிப்பு போன்றவற்றை நோக்கியும், குடிமக்கள் அதிக அளவில் செலவு செய்யும் நிலையை நோக்கியும் பொருளாதாரம் நகர வேண்டியது அவசியம். எதிர்பார்ப்புகளெல்லாம் மிகவும் தீர்மானமான விதத்தில் நேர்மறையாக மாற வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம். ஆகவே, ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்’ என்ற கோஷத்தை நடைமுறையாக்குவதற்கு இன்னும் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மனிதர்கள் ரொட்டியினால் மட்டுமே வாழ்வதில்லை. நாடுகளும் அப்படியே. ஆகவே, பொருளாதாரத்தில் இந்தியா என்ன சாதிக்கிறது என்பது மட்டுமல்ல, உலக நாடுகளுட னான நம் உறவைத் தீர்மானிப்பது, உலகத்துக்கு இந்தியா என்ன சொல்கிறது என்பதும்தான். இந்தியா என்ற கருத்தாக் கத்தை சர்வதேசச் சமூகம் கொண்டாடுகிறது. இந்தியாவின் பொருளாதார எழுச்சி தவிர, மதச்சார்பின்மை, சுதந்திரச் சமூகம், பன்மைத்துவ ஜனநாயகம் ஆகியவற்றில் இந்தியா அடையும் வெற்றியும் இனம், நிறம், மதம் போன்ற பிரிவினை களால் துண்டாடப்பட்டிருக்கும் உலகத்தால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, அரசு இனியும் தாமதிக்க முடியாது. அரசு முன்னே சென்றே ஆக வேண்டும், இந்தியப் பன்மைத்துவத்தை முன்பைவிட அதிகமாக உள்வாங்கிக் கொண்டு!

© ‘தி இந்து’ (ஆங்கிலம்), சுருக்கமாகத் தமிழில்: ஆசை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in