குப்பையாகக் கருதுகிறோம் மண்ணை!

குப்பையாகக் கருதுகிறோம் மண்ணை!
Updated on
3 min read

கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியிருக்கிறது, காப்பாற்றிக்கொள்ளுங்கள்

புதிய உலகம் அல்லது கிரகம் ஒன்றைக் கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்யுங்கள்; அங்கே பருவகாலங்கள் தவறுவதில்லை, நன்னீர் இழக்கப்படுவதே இல்லை, நோய் எதிர்ப்பு மருந்து களை வீரியமற்றுப்போகச் செய்யும் எதிர் வினைகளே இல்லை, யாருக்கும் தொப்பை என்ற பிரச்சினையே கிடையாது, பயங்கரவாதமே இல்லை, போர் என்றாலும் என்னவென்றே தெரியாது! உண்மையாகவா - அப்படி யானால் அங்கு நமக்குப் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாது அல்லவா? மன்னிக்கவும், மேலே சொன்ன அத்தனை நல்ல அம்சங்களும் அந்தக் கிரகத்தில் இருந்தாலும், மிக அற்பமானது என்றும் அவசியமற்றது என்றும் நீங்கள் நினைக்கும் ‘அந்தப் பொருள்தான்’ மிகவும் முக்கியமானது.

முக்கியமான அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்றால் நம் காலடியில் இருக்கிறது. ஆம்! அது மண்தான்; இதுபற்றி பத்திரிகைகளில் ஏன் ஏதும் வருவதில்லை என்றால், ‘இது ஒன்றும் அவ்வளவு முக்கியமானது அல்ல’ என்றே பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், எல்லா மனித உயிர்களும் இதை நம்பித்தான் இருக்கின்றன. நீண்ட காலத்துக்கு முன்னரே நமக்கு இது தெரியும். ஆனால், அதை மறந்துவிட்டோம். கி.மு.1500-ல் எழுதப்பட்ட சம்ஸ்கிருத ஸ்லோகம் இதைத் தெரிவிக்கிறது. “கைப்பிடியளவு உள்ள இந்த மண்ணில்தான் நம் உயிர்வாழ்க்கை அடங்கியிருக்கிறது. இதைக் கவனமாகக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நம்முடைய உணவை, எரிபொருளை, நம்முடைய வீட்டை இது பாதுகாக்கும், நம்மைச் சூழ்ந்துநின்று நம்முடைய வசிப்பிடத்துக்கே தனி அழகைக் கொடுக்கும்; இதைப் பராமரிக்காமல் உதாசீனப்படுத்தினால் அழிந்துவிடும் - அத்துடன் மனிதகுலமும்தான்”. மண்ணைப் பற்றி இப்படித்தான் அந்த ஸ்லோகம் தெரிவிக்கிறது.

நூற்றாண்டுகள் பல கடந்தும் இயற்கை மாறிவிட வில்லை. ஆனால், நாம் மாறிவிட்டோம். உலகம் முழுவதும் உள்ள நில உடமையாளர்கள் தங்களுடைய நிலத்து மண்ணைச் சாரமற்றுப் போகச் செய்வதில் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்; புவியில் உள்ள இந்த மண்ணில் இன்னும் 60 ஆண்டுகளுக்குத்தான் பயிர்கள் விளையும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண் அமைப்பு எச்சரிக்கிறது. வெப்பமண்டல நாடுகளில் பெய்வதைப் போல அதிவேகமாக மேல் மண்ணைக் கரைத்துக்கொண்டு ஓடும் மழை ஏதும் இல்லாவிட்டாலும் பிரிட்டனில் இதே நிலைமை நீடித்தால், இன்னும் 100 அறுவடைகளுக்குத்தான் மண் தாக்குப்பிடிக்கும் என்று விவசாயிகளுக்கான அறிவியல் வார இதழ் எச்சரிக்கிறது.

மண்ணைக் கொல்வதில் போட்டி

உலகம் முழுக்க உள்ள நில உடைமையாளர்கள் மண்ணைக் கொல்வதில் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்றனர். உலகில் உள்ள அனைவருக்கும் உணவு தானியம் வழங்க வேண்டும் என்றால், ஒவ்வோராண்டும் புதிதாக மேலும் 60 லட்சம் ஹெக்டேர் (148 லட்சம் ஏக்கர்கள்) விளைநிலங்கள் தேவை என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது. ஆனால், 120 லட்சம் ஏக்கர் நிலங்கள் ஆண்டுதோறும் மண் சாரமிழப்பதால் வீணாகிவருகின்றன. மண்ணை நாசமாக்கு கிறோம், அதைப் பற்றிக் கவலைப்படாமல் புதிய விளைச்சல் நிலங்களுக்காகவும் நிலத் தேவைகளுக் காகவும் மழைக் காடுகளையும் இதர உயிரிகளின் அரிய வாழிடங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறோம்.

மண் என்பது அற்புதமான மாயப்பொருள். அது தன்னில் விழுவனவற்றைக் காப்பாற்றி, செழிக்கச் செய்து தாவரங்களுக்குப் பயன்படத்தக்க வகையில் மாற்றித் தருகிறது. கைப்பிடி மண்ணில் கோடிக் கணக்கான நுண்ணுயிரிகள் இருப்பதை வேத ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களுக்குக் கற்றுத்தந்து, அதைப் பாதுகாத்து வாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள். ஆனால், நாமோ அதை வெறும் அழுக்காகவே கருதி அலட்சியப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

உலகுக்குச் சோறூட்ட நாம் கண்டுபிடித்த தொழில் நுட்பங்கள் யாவும் நம்மைப் பட்டினி போட்டுச் சாகடிக்கும் ஆபத்துகளைக் கொண்டதாகவே இருக் கின்றன. மானுடர்களின் காலம் (ஆந்த்ரோபோசின்) எது என்பதை ஆராயும் பத்திரிகை ஒன்று, 11-வது நூற்றாண்டில் பிரெஞ்சு ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட, அதிக பாதிப்புகளைச் சந்திக்காத வண்டலைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடந்த நூறாண்டில் மட்டும் தீவிர விவசாயச் சாகுபடி முறைகளின் மூலம் மண் அரிமானம் 60 மடங்கு அதிகமாகிவிட்டது என்று கூறுகிறது.

சிறு நகரங்களிலும் பெரு நகரங்களிலும் விவசாய நிலமாக அல்லாமல் பலருடைய வீட்டுத் தோட்டங்களிலும் கொல்லைப்புறங்களிலும் செடி, கொடிகளை வைத்துப் பராமரித்துவரும் மண்ணை எடுத்து ஆராய்ந்தவர்கள், விவசாய நிலங்களில் இருப்பதைவிட இந்த மண்ணில் இயற்கையான கரி மூன்றில் ஒரு பங்கு அதிகமாகவும், நைட்ரஜன் 25% அதிகமாகவும் இருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால், வழக்கமான பண்ணை நிலங்களாக இல்லாமல் வேறு இடங்களில் புதிய வெள்ளாமை செய்கிறவர்கள் ஒரு ஹெக்டேரில் 4 மடங்கு முதல் 11 மடங்குவரையிலும் கூட மகசூல் காண்கிறார்கள்.

விவசாயிகளுக்கு இல்லாத அக்கறையா?

இதை நான் சொல்லும்போதெல்லாம் மற்றவர்கள் என்னைக் கேட்கிறார்கள், “மண் வளமாக இருக்க வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களைவிட விவசாயி களுக்கு அதிகம் அல்லவா?” என்று. உண்மைதான், மிகச் சிறந்த விவசாயிகள் தங்களுடைய மண் வளமாக இருக்க இயற்கையான வழிமுறைகளை அக்கறையுடன் கையாள்கிறார்கள். அதே சமயம், மோசமான விவசாயிகளும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் நேரடியாக விவசாயம் செய்யாமல் குத்தகைக்கு மற்றவர்களிடம் கொடுத்து அல்லது ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்து, குறைந்த காலத்தில் அதிக லாபம் எடுக்க விவசாயம் செய்கிறவர்கள். அவர்கள் அதிக விளைச்சலுக்கு உதவக்கூடியவை என்று கூறப்படும் ரசாயனங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தி மண்ணின் நுண்ணுயிரிகளைக் கொன்று மண்ணை நாசப்படுத்துகிறார்கள். நல்ல விவசாயிகள்கூட பொருளாதார, அரசியல் முறைமைகள் காரணமாக தாங்கள் விரும்பியபடி இயற்கை விவசாயம் செய்ய முடியாமல் மற்றவர்களைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இது மண்வளம் தொடர்பான சர்வதேச ஆண்டு. ஆனால், அது உங்களுக்குத் தெரியாது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரிட்டிஷ் அரசு மண்ணின் தரம் பேணப்படுவது தொடர்பாக புதிய விதிகளை அறிவித்தது. இதற்கு முன் கூறப்பட்டவற்றைவிட இவை சற்றே பரவாயில்லை. ஆனால், இப்போது நிலவும் பிரச்சினையைத் தீர்க்க இது போதவே போதாது. இயற்கை வளத்தைக் காக்கத் தவறினால் கடும் தண்டனை ஏதும் கிடையாது, மானியத்தை நிறுத்தி வைப்பதைத்தவிர. ஆனால், இந்த நீர்த்துப்போன வழிகாட்டலைக்கூட சகித்துக்கொள்ள முடியவில்லை தேசிய விவசாயிகள் சங்கத்தாரால் (என்.எஃப்.யு.). அரசின் மீது அவர்கள் கடுமையான புகார்களைக் கூறினார்கள். மண் வளம் கெடுவதற்கு இந்த சங்கம் துணைபோகிறதோ என்றுகூட எனக்குள் சந்தேகம் வருவது உண்டு.

சமூக மவுனம்

உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது, அதிக விளைச்சல் தரும் ரகங்களைப் பயிரிட்டுச் சாகுபடியைப் பெருக்க வேண்டும் என்ற குறுகிய கால லட்சியம், மண்வளம் உள்ளிட்ட இயற்கை அம்சங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்தைக் கொன்றுவிடுகிறது. இதைப் பற்றிப் பேசாததுதான் மிகப் பெரிய சமூக மவுனமாகத் தெரிகிறது. இயற்கைச் சீரழிவுகளால் நாம் பெரிதும் பாதிக்கப்படாமலிருக்கக் கிடைத்த வாய்ப்புகளால் நமக்கு உணவு, தண்ணீர் எல்லாம் கூடத் தேவையில்லை என்ற பரிபக்குவ நிலையை அடைந்துவிட்டதைப் போல நடந்துகொள்கிறோம். மண்ணின் சாரத்தைக் காப்பதற்காக மீண்டும் கலப்பையைக் கொண்டு உழ முடியாது என்பது உண்மைதான் என்றாலும், வேறு வகைகளில் மண்ணின் வளத்தைக் காப்பாற்றலாம். உழாமலேயே விவசாயம் செய்யும் சோதனைகளில்கூட உலகின் பல பகுதிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான பலனும் வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே இருக்கிறது. இயற்கையைப் பாது காக்கும் வகையில், செயல்படுத்தக்கூடிய பண்ணைத் தொழில்நுட்பங்களைக் கையாள்வதில்கூட பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தயக்கம் நிலவுகிறது. நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடியதும், தன்னிறைவை அளிக்கக்கூடியதுமான இயற்கையான வேளாண் வழிமுறைகள் பல இருக்கின்றன.

செப் ஹோல்சர், ஜியாஃப் லாட்டன் ஆகியோர் காய்கறி, பழங்கள் சாகுபடியில் இவற்றைக் கையாண்டு சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆஸ்திரியாவில் ஆல்ப்ஸ் மலையின் 1,100 மீட்டர் உயரத்துக்கு மேலேயும் ஜோர்டான் பாலைவனத்திலும் இந்த வழிமுறைகள் நல்ல சாகுபடியை அளித்துள்ளன. ஆண்டுக்கு 45 கோடி பவுன்களை வேளாண் ஆராய்ச்சிக்காக அரசு செலவிட்டாலும், அவையெல்லாம் மண்ணை நாசப் படுத்தும் தொழில்நுட்பங்களுக்கே செலவாகின்றன.

குறுகிய காலத்தில் சாதனை படைத்துவிட வேண்டும், லாபம் சம்பாதித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மாற்று முறைகளின் சாத்தியக்கூறுகளையும் சாதனைகளையும் பார்க்க மறுக்கின்றனர்.

- © ‘தி கார்டியன்’, தமிழில் சுருக்கமாக: சாரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in