Last Updated : 18 Feb, 2015 09:28 AM

 

Published : 18 Feb 2015 09:28 AM
Last Updated : 18 Feb 2015 09:28 AM

ஜே.கே-வுடன் உறவாடுவது எப்படி?

ஜே. கிருஷ்ணமூர்த்தி மறைந்த தினம்: 17 பிப்ரவரி 1986

‘உண்மைக்கு மார்க்கம் இல்லை’ என்பார் ஜே. கிருஷ்ணமூர்த்தி!

அது எனது உயர்நிலைப் பள்ளியின் இறுதி நாளொன்றில் நடந்தது. இலங்கையின் திரிகோண மலையில் இருந்த ராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் படிப்புக்குப் புறம்பான விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிற ஒரு ஆசிரியரிடமிருந்து நான், ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம்’ (The First and Last Freedom) என்ற நூலை இரவல் வாங்கினேன். அதுவரை நான் படித்த, அதற்குப் பின்பும் நான் படிக்கவிருந்த ஏராளமான நூலாசிரியர்களுள் இந்த நூலாசிரியரல்லாத ஒருவரது வாசகங்கள் எவ்வளவுக்கு என்னைச் சல்லடையிடப்போகின்றன என்று நான் அப்போது சந்தேகிக்கவில்லை.

இன்றைய சீரிய தமிழிலக்கிய உலகில் எனது குரலுக்கு மேற்படி விடம்பனத்திலிருந்து மாறுபட்ட ஒரு தொனி இருப்பதை உணர்கிறவர்கள் உள்ளனர். இந்தத் தொனியைக் காப்பாற்றிய எனது அந்தரங்க சக்தி ஜே. கிருஷ்ணமூர்த்தியால் போஷிக்கப்பட்டமையை அவர்கள் நிச்சயம் அறிய வேண்டும். பிரசுர சாதனங்கள் மூலம் நான் வெளிப்படும் முன்பே ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம்’ எனக்குக் கிடைத்தமை இதில் முக்கிய விஷயமாகிறது. இருந்தும் நான் எனது கட்டுரைகளில் அவரது பெயரைக் குறிப்பிடாமல் நீண்ட காலங்களாகத் தவிர்த்துவந்திருக்கிறேன். இதன் காரணம், நான் அவரைப் பின்பற்றியவன் அல்ல என்பதுதான். எனக்கு இயற்கையாக இருந்த சில விசேஷ குணங்கள் உண்மையில் காப்பாற்றப்பட வேண்டிய அபூர்வத் தன்மை உள்ளவை என்பதுதான் முதன்மையாக அவரது நூல்களிலிருந்து நான் பெற்ற போஷணை.

உண்மையைத் தேடி...

இயற்கை அழகில் லயித்தல், எனது சுபாவ சக்திக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற கலையுலகை நாடுதல் என்பவை இந்தக் குணங்களாகும். சூழலின் அழுத்தமும், ஆலோசகர்களும், என்னைத் திருத்த முயன்றவர்களும் இந்த எனது போக்குகளை பலவீனப்படுத்திவிடாதபடி அன்று உதவியவர் ஜே. கிருஷ்ணமூர்த்திதான். இதற்கும் மேலே போய், பால்ய வயதில் சமூக மரபுகளினது கெடுபிடிகளின் விளைவாகப் பிறக்கக்கூடிய குற்ற உணர்வு என்ற விபரீதமான பின்னணி எதுவும் பிறந்துவிடாமலும் அவரது போஷணை காத்திருக்கிறது. ‘இது நல்லது, அது கெட்டது' என்ற பிளவுபட்ட மனோபாவத்தின் கொடுங்கோல் என் மனசில் எப்போதுமே வலிமை யற்றுத்தான் இயங்கிவந்திருக்கிறது. இதற்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தியை நான் காரணம் காட்டலாம்.

உண்மையைத் தேடுதல், ஆத்மானுபவத்தை உத்தேசித்தல் அகியவற்றை முக்கியமாக்குகிறபோது, உலகையும் இயற்கையையும் சுபாவ சக்திகளையும் இதன் விளைவாகச் செயலூக்கத்தையும் மனம் முக்கியமாகக் கொள்வதில்லை. இவற்றுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் மனசின் நுட்பமான உணர்வுகள் மழுங்கிவிடும். இந்த ஆபத்து எனக்கு ஏற்படாதவாறு ஜே. கிருஷ்ணமூர்த்திதான் காத்திருக்கிறார். ஏனெனில் எழுத்துலகினுள் நுழையும் தறுவாயில் சந்நியாஸம் வாங்கிக்கொள்கிற நோக்கமும் எனக்கு இருந்திருக்கிறது. சந்நியாஸ மதிப்பீடுகள் உணர்வுகளை மழுங்கடித்துக் கொன்றுவிடுகிற குணத்தைக் கொண்டவை. இது விஷயமாக ஜே. கிருஷ்ணமூர்த்தி தீவிரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். உணர்வு களைக் கொல்கிற மத மரபுகளையும் அனுஷ்டானங் களையும் மதிப்பீடுகளையும் மிகுந்த வலிமையுடன் சாடி நொறுக்கிவிடுகிற சக்தி அவருடைய கருத்துக்களுக்கு உண்டு.

விருப்புவெறுப்பற்ற புத்துணர்வு

உணர்வின் பரிபூர்ணமான சுதந்திர நிலையிலேயே அது தனது குழந்தைமைக்குத் திரும்ப முடியும். விருப்புமற்று வெறுப்புமற்ற புத்துணர்வே இந்த குழந்தைமை. இந்தப் புத்துணர்வுதான் உள்ளதை உள்ளபடி தரிசிக்க உறுதுணையாகும். உணர்வுக்கு மரபுகள் இடும் தளைகள், உள்ளதை உள்ளபடி தரிசிக்க உதவாதவை. இந்த மரபு பழையதோ புதியதோ என்பதல்ல பிரச்சினை. உள்ளது என்பது இப்போது மனம் கொள்ளும் தாகங்களும் எதிர்ப்புகளும் அனுதாபங்களும்தான். இந்நிலையில் உழன்றபடியே இதைத் தாண்டி உள்ள ஏதோ ஒன்றை லட்சியமாகக் கொள்வதென்பது இப்போது ‘உள்ளது' எதுவோ அதனை தரிசிப்பதனின்றும் தப்புவதாகிவிடும். இப்போது உள்ளது தாகம். எவ்வித முன்னபிப்பிராயமும் அற்ற பரிவுடன் மெளனமாக இதைப் பார்த்தல்தான் முக்கியமானது. இந்தப் பார்வையில் நிச்சலன நிலை மட்டும் உண்டு.

சரி, இப்படித் தனது தாகங்கள் முதலியவற்றை அவதானிப்பதால் என்ன லாபம்? இந்தக் கேள்வியே தாகங்களை அவற்றின் தளத்தில் ஒரு பிரச்சினையாகக் காணாத மனசில்தான் ஜனிக்கும். தாகங்களைப் பிரச்சினை களாக, அவதானத்துக்குரிய இயற்கை வடிவுகளாகக் காண வேண்டுமானால், மனசிற்கு மென்மையும் வீரியமும் இருந்ததாக வேண்டும். தாகங்களை அவதானிப்பதால் ஏதோ லாபம் கிடைக்கும் என்று புறப்பட்டால், அந்த லாபத்தைப் பற்றிய தாகமாக மற்றைய தாகங்கள் மாற்றியமைக்கப்படும். தாகம் என்ற மனநிலை இவ்விதமாகத் தற்காப்படைந்துவிடும். அந்த ஏதோ ஒரு லாபத்துக்கான தாகம் என்ற நிலையில் மனசின் சுகதுக்கங்களும் விருப்புவெறுப்புகளும் அமையும். இதுவே, உலகைப் பிளவுபடுத்தும் உன்னத லட்சியங்களினது மோதல்களாக வடிவெடுக்கிறது.

சிலுவைப் போர்

இதனால்தான் ‘உண்மைக்கு மார்க்கம் இல்லை' என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஏனெனில், மார்க்கம் ஒரு லட்சியத்திற்குச் செல்லும் பாதையாகும். லட்சியமாகக் கொள்ளப்படும் எதுவும், மனசினது தாகம் பூணும் வெளிவேஷம்தான். லட்சியத்தை விட்டுவிட்டால் தாகம் தாகமாகவே நிற்கும். ‘சிலுவைப் போர்' என்பது லட்சியமாக உருமாற்றப்பட்ட வெறும் போர்தான். இதில் சிலுவை என்ற லட்சியாம்சத்தை அகற்றினால்தான் இது வெறும் போர் என்று புலனாகும். இதே போன்று உலக சரித்திரத்தில் எண்ணற்ற ரணகளங்களாக லட்சியம் நியாயமடைந்துள்ளது. இந்த இயக்கத்தின் சுனை, ஒவ்வொரு தனிமனித உள்ளமுமே என்கிறார் ஜே. கிருஷ்ணமூர்த்தி. இதனால்தான் தனது தாகங் களையும் விருப்புவெறுப்புகளையும் அவதானிப்பதால் என்ன லாபம் என்ற கேள்வி பாரதூரமான அளவுக்குத் தவறானது. இங்கேதான் குழந்தைமையுடன் எவ்வித லாபநோக்குமற்றுத் தன்னைத் தானே அவதானிப்பது என்பது விரிவடையும். இவ்விதம் தன்னைத் தானே அவதானிப்பதென்பதும், இயற்கையை, உலகை, வாழ்வை அவதானிப்பதுவும் ஒரே கதியில் நிகழ்பவை.

ஜே.கிருஷ்ணமூர்த்தி முதன்மையாக இயற்கையை அவதானிக்கும் கலையினையே தமது செய்திக்கு அடித்தளமாக்குகிறார். ‘உண்மையைத் தேடி' அவரிடம் போகிறவர்கள் இதைப் பெரும்பாலும் உணர்வ தில்லை. ஆனால், இயற்கையுடன் கொள்ளும் உறவு, ஒரு வகையில் அந்தரங்கத் தளம் ஒன்றில் ஜே. கிருஷ்ணமூர்த்தியினது விகாஸம் ஒன்றுடனேயே கொள்ளும் உறவாகக் கொள்ளத் தக்கதுதான். அவருடன் எவ்வளவுக்கு ஒருவர் நெருங்கிப் பழகியிருந்தாலும் சரி, இயற்கையுடன் பழகாதவராயிருந்தால் அந்த ஒருவர் ஜே. கிருஷ்ணமூர்த்தியுடனும் உறவு பூணவில்லை என்றுதான் ஆகும்.

ஓர் அபூர்வ சக்தி

நான் ஜே. கிருஷ்ணமூர்த்தியை 1970 - 71 வாக்கில் ஒருசில நிமிஷங்கள் சென்னையில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவருடன் அதிகம் பழகுவது முக்கியமற்ற சில்லறை விஷயமாகத்தான் எனக்குத் தோன்றிவந்திருக்கிறது. இருந்தும், நான் என்னை அவதானிக்கும் கலையில் ஈடுபட்டமையில் ஏற்பட்ட வீரிய ஏற்றஇறக்கங்களுக்கேற்ப அவருடன் எனது உறவும் பல்வேறு ரஸ பேதங்களைக் காட்டி வந்திருக்கிறது. “பிறருக்கும் எனக்கும் இடையே யாரும் வர முடியாது” என்று அவர் உறுதியாகக் கூறுவதனை நான் இவ்விடத்தில் ஸ்தாபிக்க விரும்புகிறேன். ‘உண்மையான ஜே. கிருஷ்ணமூர்த்தி, உலகப் பிரசித்தி பெற்ற ஒரு சரீர வடிவம் அல்ல’ என்பதை உணர்வது இதற்கு அவசியம். நமது கவனம் விழாத திசையில் தனது கவனத்தைச் செலுத்துவதன் மூலம் நம்முடனேயே உறவுகொள்ள நாடுகிற ஒரு அபூர்வ சக்தி என்றுதான் அத்தகையவரைக் கொள்ள வேண்டும். இதை உணர்கிறவருக்கும் அவருக்குமிடையில் எவரும் வர முடியாதுதான்.

- பிரமிள் (1939 - 1997), பாரதிக்குப் பிந்தைய தமிழ்க் கவிஞர்களில் முதன்மையானவர்.

(‘நவீன விருட்சம்’ இதழில் 1991-ல் பிரசுரமான கட்டுரை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x