Published : 28 Dec 2014 01:05 PM
Last Updated : 28 Dec 2014 01:05 PM

2014-ல் 12 முக்கிய அறிவியல் தருணங்கள்

அறிவியல் நிபுணர்களைக் கொண்டு ‘தி கார்டியன்’ இதழ் தயாரித்திருக்கும் பட்டியல்

1. மேற்கு அண்டார்டிகாவில் பனிப்படிவுகள் பெருமளவில் உருகத் தொடங்கின – 13 ஜனவரி:

மேற்கு அண்டார்டிகாவில் படர்ந்திருந்த பனிப்படிவுகள், இனி திரும்பவும் பழைய நிலைக்குத் திரும்பாது என்கிற அளவுக்கு உருகி ஆமுண்ட்சன் கடலில் கலந்துவருவதாக 3 ஆய்வுகள் தெரிவித்தன. அடுத்த சில நூறாண்டுகளுக்கு உலகின் கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும். மனிதர்களின் செயலால் பனி உருகுகிறது என்று வழக்கமாகக் கூறும் காரணத்தை இதற்குக் கூற முடியாது. அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆகிய இடங்களுக்கு வேண்டுமானால் இது ஓரளவுக்குப் பொருந்தலாம். ஆமுண்ட்சன் கடலிலேயே பனிப்பாறைகளுக்குக் கீழே கடல் நீர் சூடானதால் இந்த உருகுதல் அதிகரித்துள்ளது. கடல் நீர் சூடேறியதற்கும் மனிதர்கள்தான் காரணமா என்ற ஆய்வும் தொடர்கிறது.

2. எஜமானரின் குரலை நாய்கள் அடையாளம் காண்கின்றன – 21 பிப்ரவரி:

மனிதனின் மூளை எப்படி வேலை செய்கிறது என்று எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் மூலம் ஆய்வு செய்கிறார்கள். அதையே வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார்கள். உணர்ச்சியூட்டக்கூடிய குரல்களைக் கேட்டால் மனிதர்களாலும் நாய்களாலும் அதற்கு எதிர் வினையாற்ற முடிகிறது என்று மூளைத் திசுக்களின் மடிப்புகளுடைய செயல்பாட்டை ஆராய்ந்ததிலிருந்து அறிய முடிகிறது. தன்னை வளர்க்கிறவர்களுடைய சில வார்த்தை களை நாய்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே மாதிரி கையாலோ கை விரலாலோ சுட்டப்படுவதையும் நாய்கள் புரிந்துகொள்கின்றன. அங்கே போய்ப் படு என்றாலோ அசையாமல் இரு என்றாலோ அதைக் கேட்டு நடக்கின்றன. சுட்டிக்காட்டுவதைக் கொண்டு புரிந்துகொள்ளும் ஒருசில உயிரினங்களில் நாயும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

3. ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு (அல்லது கண்துடைப்பா?) – 17 மார்ச்:

பேரண்டம் பிறந்தபோது ஏற்பட்ட அலைகளை விண்ணில் அடையாளம் கண்டதாகப் பிரபஞ்சவியலாளர்கள் தெரிவித்தனர். தென் துருவப் பிரதேசத்தின் ஆமுண்ட்சன்-ஸ்காட் விண்நோக்கி, பைசெப்-2 உதவியுடன் இதைக் கண்டுபிடித்ததாக அவர்கள் கூறினர். மிகவும் நுட்பமான விண்நோக்கி மூலம் ஆய்வுசெய்தபோது, மிகவும் பலவீனமான நுண்ணலை கதிர்வீச்சு வெளிப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால், இந்த உற்சாகம் வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. நட்சத்திர மண்டலத்தைச் சுற்றிவரும் விண்வெளித் தூசியை (ஸ்பேஸ் டஸ்ட்) ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தனர். இந்த ஆய்வுக்குப் பிறகு, முதலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தகவல் நம்பக மானதுதானா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது. என்ன, புருவத்தை உயர்த்துகிறீர்களா? அதுதான் அறிவியல். எந்த ஒரு அனுமானமும் முடிவும் இறுதியானதல்ல. அடுத்த தகவல் கிடைக்கும்போது இந்த முடிவும் மாறும்.

4. நோய் உயிர்முறிகளுக்கு (ஆன்டிபயாடிக்ஸ்) அடங்க மறுக்கும் தன்மையை ஆராயும் ஆய்வுக்கு 10 மில்லியன் லாங்கிடியூட் விருது – 25 ஜூன்:

நோய் உயிர்முறிகள் (ஆன்டிபயாடிக்ஸ்) பலனற்றுப் போகும் வகையில் நோய்க்கான காரணிகள் தகவமைத்துக் கொள்வது மருத்துவ உலகில் பெரிய சிக்கலாக உருவாகிவருகிறது. லாங்கிடியூட் விருது நிறுவப்பட்டு 300 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2014-ல் மனித குலம் எதிர்நோக்கிய 6 முக்கிய சவால்களைப் பட்டியலிடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நோய் உயிர்முறிகள் பயனற்றுப்போகும் நிலை மிகப் பெரிய சவால் என்று லிஸ் போனின் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் கூறிய கருத்து ஏற்கப்பட்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது. மக்களிடமே இப்படிக் கேள்வி கேட்பதால் புதிய கண்டுபிடிப்புகளையும் கூட்டுத் தொழில் முயற்சிகளையும் ஊக்குவிக்க முடிகிறது. ஆயிரக் கணக்கான தனிநபர்களும் அமைப்புகளும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர். நாம் எதிர்பாராத இடத்திலிருந்து தீர்வு கிடைக்கும் என்று நம்பலாம்.

5. கரிப்புகை வெளியீட்டை விண்ணிலிருந்து கண்காணிக்கும் ஆய்வு நிலையம் ஏவப்பட்ட நிகழ்ச்சி – 2 ஜூலை:

புவியின் மேற்பரப்பில் வெளியிடப்படும் கரிப்புகையின் அளவு, அது தோன்றும் இடம், அதனால் ஏற்படும் பருவநிலை மாறுதல்கள் போன்றவற்றைக் கண்காணிக்கவும் தரை நிலையத்துக்குத் தகவல் தரவும் அமெரிக்காவின் வான்டன்பர்க் விமானப்படை தளத்திலிருந்து டெல்டா-2 ரக ராக்கெட் நுண்ணோக்கிக் கருவியைச் செயற்கைக் கோளில் சுமந்து சென்றது. மார்க்-1 என்ற பெயரில் 2009-ல் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக்கோள் விண்ணில் நிகழ்ந்த விபத்தில் நாசமாகிவிட்டது. இந்த செயற்கைக் கோள் நம்முடைய பூமி எப்படி சுவாசிக்கிறது என்பதைச் சுற்றிச்சுற்றி வந்து தகவல்களைச் சேகரித்து அனுப்பிக்கொண்டேயிருக்கும். அதற்கேற்ப எதிர்காலத்தில் கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கவும் அறவே தவிர்க்கவும்கூட முடியும்.

6. நாலரை ஆண்டுகள் அடைகாத்த ஆக்டோபஸ் அன்னை – 30 ஜூலை:

கடலுக்கு அடியில், ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில், கும்மிருட்டில், எலும்பையே உறையவைக்கும் கடுங்குளிரில் 53 மாதங்கள் – கிட்டத்தட்ட நாலரை ஆண்டுகள் – உண்ணாமல், உறங்காமல், அசைவு ஏதும் இல்லாமல் ஒரே இடத்தில் உங்களால் உட்கார்ந்துகொண்டிருக்க முடியுமா, அதுவும் முட்டைகளின் மீது? ஒரு ஆக்டோபஸ் அப்படித் தவமிருந்து தன்னுடைய முட்டைகளை அடைகாத்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வளவு பொறுமையுடன் அடைகாத்தாலும் குஞ்சுகள் வெளிவந்து நடமாடத் தொடங்கும்போது தாய் ஆக்டோபஸ் உடல் கிழிந்து மரித்துப்போவதுதான் உச்சம். எல்லா ஆக்டோபஸ் தாய்க்குலங்களும் இப்படித்தான் செய்கின்றனவா, கடலுக்கடியில் நீண்ட காலம் உணவின்றி வாழும் வலிமையையும் தந்திரத்தையும் அவை எப்படிப் பெறுகின்றன என்கிற ஆய்வுகள் தொடர்கின்றன.

7. பேராசிரியர் ஜான் ஓகீஃப் மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்றது – 6 அக்டோபர்:

பேராசிரியர்கள் ஜான் ஓகீஃப், மே-பிரிட், நார்வேயைச் சேர்ந்த மே-பிரிட், எட்வர்ட் மோசர் ஆகியோர் மூளையின் செயல்பாட்டை ஆராய்ந்து கண்டுபிடித்த அரிய தகவல் களுக்காக நோபல் பரிசு பெற்றனர். ஒரு இடத்துக்குப் போவதற்கான வழியையும் அடையாளமான இடங்களையும் நம் மூளையின் எந்தப் பகுதி பதிவு செய்து உதவுகிறது என்பதை மூவரும் கண்டுபிடித்தார்கள். மகத்தான இந்தக் கண்டுபிடிப்புக்குச் சரியான அங்கீகாரமே நோபல்.

8. வர்ஜின் கேலக்டிக் நொறுங்கல் – 31 அக்டோபர்:

வர்ஜின் கேலக்டிக் என்ற நிறுவனம் விண்வெளிக்கு வர்த்தகரீதியாகப் பயணிகளை ஏற்றிச்செல்லப்போவதாக அறிவித்திருந்தது. 5 ஆண்டுகள் கழித்து ஒருவருக்குப் பயணக் கட்டணம் 2.5 லட்சம் டாலர்கள். கடந்த அக்டோபர் 31-ம் தேதி கேலக்டிக்-2 சோதனை முறையில் பறக்க விடப்பட்டபோது வெடித்துச் சிதறியது. அதை இயக்கிய பைலட்டும் இறந்துவிட்டார். இந்த விபத்தால் விண்வெளிக்குப் பிற மனிதர்களை ஏற்றிச் செல்லும் சாகசப் பயணம் தாமதமாகும் என்பது உறுதியாகிவிட்டது.

9. வால்நட்சத்திரத்தில் பிலே தரையிறங்கியதால் மோனிகா கிராடி அடைந்த உற்சாகம் – 13 நவம்பர்:

வால்நட்சத்திரம் ஒன்றை அதிலிருந்தே ஆராய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் பிலே என்கிற நவீன ஆய்வுக் கருவியை பத்தாண்டுகளுக்கு முன்னர் அனுப்பியது. அது 2014 நவம்பர் 13-ல் வால்நட்சத்திரத்தில் இறங்கி தகவலும் புகைப்படமும் அனுப்பத் தொடங்கியதும் விண்ணாய்வு நிலையத்தில் இருந்த மோனிகா கிராடி என்ற பெண் விஞ்ஞானி துள்ளிக்குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பிலேயின் சாதனையை இதைவிட அதிகமாக யாரும் கொண்டாடிவிட முடியாது.

10. டிரினில் ஓடு- டிசம்பர் 3:

நேச்சர் பத்திரிகையில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ஒரு கட்டுரை, மனித குலத்தின் தோற்றத்தை ஆய்வு செய்யும் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்தோனேசியாவின் டிரினில் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கடல்வாழ் உயிரினத்தின் ஓடுதான் அந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம், அதன் வயது 5 லட்சம் ஆண்டுகளுக்கு மேல். அதற்காகவா அதிர்ச்சி? இல்லையில்லை, அதன் மீது அப்போதைய மனிதனால் கையால் வரையப்பட்ட சில குறிகள் காணப்பட்டிருக்கின்றன.

அவை வடிவகணிதத்தில் இப்போதும் பயன்படுத்தப்படும் சங்கேதக் குறிகள். வடிவகணித சங்கேதங்களை நவீன மனிதர்களால்தான் (அதாவது சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இப்போது வரை இருக்கும் நவீன மனிதர்களால்) வரைய முடியும் என்று ஆய்வாளர்கள் கூறிவரும் நிலையில், இந்தக் கண்டுபிடிப்பு கால வரை யறையை மேலும் முன்னுக்குத் தள்ளியிருக்கிறது.

11. ஓரியான் சோதனைக் கலம் பூமிக்குத் திரும்பியது – 5 டிசம்பர்:

ஓரியான் விண்கலம் கலிஃபோர்னியாவுக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் சோதனை ஓட்டத்துக்குப் பிறகு பத்திரமாகத் திரும்பி வந்து சாதனை படைத்தது. பூமியைச் சுற்றி மிகக் குறைந்த உயரத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் பறந்து செல்லும் முயற்சியை ஓரியான் மேற்கொண்டது. ஆளற்ற ஓரியான் கலம் பூமியை விட்டு வெகு தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றிவிட்டுத் திரும்பியது. மனிதர்களை ஏற்றிச் சென்ற விண்கலங்களைவிட அதி வேகத்தில் பறந்தது. ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்துக்குப் பயணிக்கும் முயற்சிகளுக்கு நாம் இன்னும் எவ்வளவோ முயற்சிக்க வேண்டியிருந்தாலும் இந்த சாகசம் அதற்கான முதல் படி.

12. சூரிய ஒளித்தகடுகள் 40% திறனுடன் செயல்பட புதிய முயற்சி – 8 டிசம்பர்:

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தின் திறன் மேலும் கூட்டப்பட்டிருக்கிறது. மிக மெல்லிய மேற்பரப்பைக் கொண்ட பாதியளவு மின் கடத்திகள் இருளில் மிக மெதுவாகவும் சூரிய வெளிச்சத்தில் அதிகமாகவும் மின்சார ஆற்றலைக் கடத்தும் திறன் படைத்தவை. இப்போதைக்கு சிலிக்கான் கொண்டுதான் சூரியஒளி மின்சாரப் பலகைகளை அமைக்கின்றனர். இந்நிலையில், சூரியஒளி மின்சாரத் தயாரிப்புத் தகடுகளின் திறன் 40% என்றாகியிருப்பது மிகவும் முக்கியமான முன்னேற்றமே.



- © ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x