Last Updated : 11 Jul, 2019 08:47 AM

 

Published : 11 Jul 2019 08:47 AM
Last Updated : 11 Jul 2019 08:47 AM

எந்த அளவுக்கு முற்போக்கானது இந்தி?

மும்மொழித் திட்டத்தின் கீழ் இந்தியை நாடு முழுக்கக் கொண்டுசெல்லும் அரசின் கனவை அடுத்து, இந்தி மொழி தொடர்பான விவாதங்கள் நாடு முழுக்கவும் நடக்கத் தொடங்கியிருக்கின்றன. விசேஷம் என்னவென்றால், இந்தி பேசாத சமூகங்கள்போலவே இம்முறை இந்தி பேசும் சமூகங்களும் விமர்சனபூர்வமாக இந்த முடிவை அணுகும் போக்கு உருவாகியிருப்பதுதான்.

டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ‘தி கேரவன்’ இதழின் எழுத்தாளர்களில் ஒருவரும் சமீபத்தில் ‘ரெட் இங்க்’ விருது அறிவிக்கப்பட்டவருமான சாகர்  ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். பிஹாரில் சிறுநகரம் ஒன்றின் தலித் மக்கள் குடியிருப்பில் பிறந்து வளர்ந்த அவர் தன் பள்ளிப் படிப்பை முழுக்க இந்தி வழி கற்றவர். பிற்பாடு இதழியல் படிப்பதற்காக கர்நாடகம் சென்றபோதுதான் அவருக்கு ஆங்கிலத்தின் தேவை உருவாகிறது. கன்னடம் தெரியாத நிலையில் ஆங்கிலம் மட்டுமே கரை சேர்க்கும் என்ற நிலைக்குத் தள்ளப்படும் அவர் ஆங்கிலத்தில் தீவிரமான வாசிப்புக்குள் நுழையும்போது, அவருடைய 28 வயதில்தான் அம்பேத்கரின் ‘அன்னிஹிலேஷன் ஆப் காஸ்ட்’ நூலைப் படிக்கிறார்.

ஆங்கிலம் வழியாகவே இதர சமூகச் சீர்திருத்தவாதிகளான ஜோதி ராவ் பூலே, மால்கம் எக்ஸ், பெரியார் ஆகியோரின் எழுத்துகளை வாசிக்கிறார். இவை எல்லாமும் சேர்ந்து அவருடைய பார்வையையும் வாழ்க்கையையும் திருப்புகின்றன. அப்போது அவருக்கு ஒரு கேள்வி உண்டாகிறது. ‘இவையெல்லாம் ஏன் இந்தி வழியே எனக்குக் கிடைக்கவில்லை’ என்பதே அது! 1946-ல்தான் அம்பேத்கர் ‘அன்னிஹிலேஷன் ஆப் காஸ்ட்’ நூல் மூலமாக இந்திக்குள் வருகிறார் என்பதைச் சொல்லும் சாகர்,  அம்பேத்கர் நூற்றாண்டு வரையிலும்கூட அவருடைய புத்தகங்களோ, ஏனைய சமூகச் சிந்தனையாளர்களின் புத்தகங்களோ இந்தியில் பரவலாகக் கிடைக்கவில்லை என்பதையும் சொல்கிறார். 1936-ல் அந்தப் புத்தகம் வெளியான மறுவருஷம்  பெரியாரால் பத்திரிகையில் தொடராகவும் தொடர்ந்து தனி நூலாகவும் மேற்கண்ட புத்தகம் தமிழில் கொண்டுவரப்பட்டுவிட்டது என்பதோடு ஒப்பிட்டால், சாகர் சொல்வதன் பின்னணியிலுள்ள சாதிய  அரசியல் புலப்படும்.  “19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கவிஞர் பரதேந்து ஹரிசந்திராதான் நவீன இந்தியின் தந்தையாகக் கொண்டாடப்படுகிறார்.

அக்காலகட்டத்தில் தோன்றிய சமய இயக்கங்களுக்கும் நவீன இந்தி மொழி உருவாக்கத்துக்கும் தொடர்புள்ளது” என்று சொல்லும் சாகர், ஒரு மொழியை உருவாக்குபவர்கள், வடிவமைத்தவர்கள், பரப்புபவர்களுக்கும் அந்த மொழியின் உள்ளடக்கத்துக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது என்பதோடு புரட்சிகரக் கருத்துகள் இந்திக்குள் பரவலாக்கப்படாததில் பெரும் அரசியல் இருக்கிறது என்கிறார். ஆங்கிலம் விடுதலைக்கான கருவிகளில் ஒன்றாகக் கீழ்நிலைச் சமூகங்களால் பார்க்கப்படுவதற்கான காரணத்துக்கு மேலும் நியாயம் சேர்க்கும் சாகரின் கருத்துகள் தேசிய அளவில் கல்வியாளர்கள் - மொழி ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x