Last Updated : 17 Jul, 2017 09:27 AM

 

Published : 17 Jul 2017 09:27 AM
Last Updated : 17 Jul 2017 09:27 AM

வாச்சாத்தி கொடூரமும் 25 ஆண்டுகள் போராட்டமும்!

முதன்முதலில் வாச்சாத்தி கிராமத்துக்கு நாங்கள் சென்றது 1992, ஜுலை 14 அன்று. 25 ஆண்டுகள் முடிவடைந்திருக்கின்றன! பேச்சில்லாத கிராமமாகத்தான் அப்போது இருந்தது வாச்சாத்தி. வருவாய்த் துறை ஆவணங்களில் மனிதர்கள் வாழாத கிராமத்தை இப்படித்தான் குறிப்பிட்டிருப்பார்களாம். ஆம்! எந்த ஜீவராசிகளும் அந்த ஊரில் இல்லை. எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. வீடு, வீட்டில் இருந்த பொருட்கள், வளர்த்த ஆடு, மாடு, கோழி, நாய்கள் என எல்லாம்! மனிதர்கள்? சிக்கியவர்கள் சிறையில், மற்றவர்கள் மலையில்! தண்ணீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி ஒரு கொடுமையை அதற்கு முன் நான் வாழ்நாளில் பார்த்ததில்லை.

இப்படியொரு கிராமத்தையே சூறையாடியது, வீடுகளை நொறுக்கியது, ஆடு, கோழிகளைச் சுட்டுத் தின்றது. அதன் கழிவுகளைக் கிணறுகளில் போட்டுத் தண்ணீரை அசுத்தப்படுத்தியது என எல்லாக் கொடுமைகளையும் செய்தது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை, வனத் துறை, வருவாய்த் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என்பது அன்று நம்ப முடியாததாக இருந்தது. நேரில் சென்று பார்க்காத யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்தான். அப்போது பொதுநல வழக்குகளைக் கவனித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ஜேசுதுரையும் நம்பவில்லை. படித்தவர்கள், அரசுப் பணியில் உள்ள உயர் அதிகாரிகள் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என்று கூறி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போடப்பட்ட பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டார். பிறகுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவனின் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம்.

தாமதிக்கப்பட்ட நீதி

அப்போது ஏ.நல்லசிவன் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். 1992 ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். இந்த நிலையில்தான், வழக்கை ஏற்று உச்ச நீதிமன்றம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விசாரிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இப்படி உத்தரவு போட்டது 1992 செப்டம்பர் 8-ம் தேதி. ஆனால், வழக்கில் தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது 2011 செப்டம்பர் 29. அதாவது 19 ஆண்டுகள் கழித்து தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்று காலங்காலமாகச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால், அதில் மாற்றத்தை ஏற்படுத்த நீதித் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட எவரொருவரும் தயாராக இல்லை என்பதுதான் இப்போது வரை உள்ள நிலை. அதற்கு உதாரணமாக பல நூறு வழக்குகள் இன்றும் நடைபெற்றுவருகின்றன என்பதை நாமறிவோம்!

அதிமுக-திமுக: மௌனமான அநீதி

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆளும் அதிமுக மொத்தத்தையும் மூடி மறைத்தது. பிறகு, ஆட்சிக்கு வந்த திமுகவும் வாச்சாத்தி வழக்கைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்தது. நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகளுக்குத் தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் பெற்றுத்தர நடத்திய போராட்டங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவற்றைப் பற்றி எழுதினால் பெரும் காவியமாகும். வாச்சாத்தி வன்கொடுமையை எதிர்த்த போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் உந்துவிசையாக விளங்கியவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அப்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் கே. வரதராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. வாச்சாத்தி பழங்குடி மக்கள்மீது அந்தக் கொடுமை நடந்ததோ 1992 ஜூன் 20, 21, 22 ஆகிய மூன்று நாட்களும். நாங்கள் சென்றதோ ஜூலை 14-ம் தேதி. இடையில் 20 நாட்களுக்கு மேலாக அங்கு நடந்த தாக்குதல்கள், கொடுமைகள் குறித்து வெளி உலகத்துக்கே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டிருந்தது என்பது அதிர்ச்சிஅளிக்கக்கூடிய உண்மை.

பிறகு, எங்களுக்கு மட்டும் எப்படித் தெரியவந்தது என்று எல்லோரும் இப்போதும் கேட்கிறார்கள். ‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்குவதற்காக மலைகள்தோறும் மாநாடுகளை நடத்திக்கொண்டிருந்தோம். அப்படி ஒரு மாநாடு தருமபுரி மாவட்டம் சித்தேரி மலையில் 1992 ஜூலை 7-ம் தேதி நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில், அப்போது சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த கே. பாஷாஜான், மாநிலத் துணைச் செயலாளராக இருந்த என். கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசிகளும் கலந்துகொண்டனர். அதில் வாச்சாத்தி கிராமத்தில் இருந்து தப்பி, சித்தேரியில் உறவினர் வீடுகளில் நான்கு பேர் தங்கியிருந்துள்ளனர். ஆதிவாசி மக்கள்மீது வனத் துறையினர் நிகழ்த்தும் கொடுமைகள் குறித்தும், அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசியுள்ளனர். அதைக் கேட்டு, நம்பிக்கை பெற்ற வாச்சாத்தியைச் சேர்ந்த இரண்டு பேர், வாச்சாத்தியில் நடந்த கொடுமைகளையெல்லாம் அந்த மாநாட்டில் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளனர். இதுதான் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் தொடக்கப் புள்ளி.

மாநாடு முடிந்த பிறகு அந்த நால்வரிடமும், நடந்த விவரம் முழுவதையும் தலைவர்கள் தனியாகக் கேட்டறிந்தனர். கட்டாயம் உதவுகிறோம் என்று அவர்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளித்துள்ளனர். அப்போது நான் கொல்லிமலையில் இருந்தேன். தொலைபேசி வசதியெல்லாம் இல்லை. எனவே, 9-ம் தேதி நேரில் வந்து என்.கிருஷ்ணமூர்த்தி மேற்கண்ட விவரங்களை என்னிடத்தில் தெரிவித்தார். மறுநாள் நாங்கள் மூவரும் கள்ளக்குறிச்சியில் சந்தித்துப் பேசினோம். பாஷாஜான் அப்போது கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கிராமத்தில் வாழ்ந்துவந்தார். ஜூலை 13-ம் தேதி அரூரில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றும், பிறகு கிராமத்துக்கு நேரில் செல்வதென்றும் முடிவெடுத்தோம். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தோம். எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் மனுவைப் பெற்றுக்கொண்டார். அவர் முன்னிலையில்தான் அத்தனை கொடுமைகளும் நடந்துள்ளன என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டோம்.

பாலியல் கொடுமைகள்

மறுநாள் ஜூலை 14-ம் தேதி காலை சுமார் 11.00 மணியளவில் நாங்கள் வாச்சாத்தி கிராமத்தை அடைந்தோம். அதில், கே.பாஷாஜான், என். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். அண்ணாமலை, சித்தேரி மலை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலாளர் ஏ. பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் வட்டச் செயலாளராக அப்போது செயல்பட்டுவந்த சி. விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளராகச் செயல்பட்டுவந்த எச்.ஆர்.கணேசன், கூடவே நான் உட்பட ஏழு பேர். இந்தக் குழுதான் முதன்முதலில் வாச்சாத்திக்குச் சென்றது. வனத் துறையினரால் இளம் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை அன்றுதான் நாங்கள் கேட்டுப் பேரதிர்ச்சிக்கு உள்ளானோம். அன்று மாலை சேலம் பெண்கள் சிறையில் நாங்கள் சந்தித்த வார்டனும் அதை உறுதிசெய்தார். என்னுடன் வந்தவர்களில் பாஷாஜான், அண்ணாமலை, பொன்னுசாமி, கணேசன் ஆகியோர் மறைந்துவிட்டனர். இப்போது வழக்கு, தண்டனை பெற்ற குற்றவாளிகளால் மேல்முறையீடு செய்யப்பட்டு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. பழங்குடியினர்தானே, பேச்சற்றவர்கள்தானே என்று காலம்காலமாக அதிகாரத் தரப்பினர் கொடுமைகள் நிகழ்த்திக்கொண்டிருந்தனர். அவை யாவும் இனியும் தொடர முடியாது என்பதற்கான நம்பிக்கையைத் தந்ததுதான் வாச்சாத்தி வழக்குக்கான எங்கள் போராட்டம். பழங்குடியினர் மீதான அத்துமீறல்கள் ஓயும் வரை எங்கள் போராட்டமும் ஓயாது!

- பெ.சண்முகம், துணைத் தலைவர்,

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.

தொடர்புக்கு: pstribals@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x