Last Updated : 31 Oct, 2013 09:43 AM

 

Published : 31 Oct 2013 09:43 AM
Last Updated : 31 Oct 2013 09:43 AM

உலகத்துக்கு ஏதாவது கருத்து சொல்லியே ஆகணுமா?

“ஒபாமா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நான் முடிவு செய்வேன். வீட்டில் யார் துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளை என் மனைவி முடிவு செய்வாள்’’ என்ற கணவன் - மனைவி ஜோக் இங்கு மிகப் பிரபலம். ஆனால், நாளாக நாளாக இந்த ஜோக் உண்மையாகிவருகிறது. இப்போதெல்லாம் ஒபாமா என்ன செய்ய வேண்டும், மன்மோகன் சிங் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யார் வேண்டுமானாலும் முடிவுசெய்கிறார்கள். கேட்கவோ பார்க்கவோ ஒரு கூட்டம் இருக்கிறது என்பதற்காக டி.வி-யிலோ, சமூக ஊடகங்களிலோ எல்லாப் பிரச்சினைகளுக்கும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக எழுதப்பட்டது அல்ல இந்தக் கட்டுரை. ஆனால், எல்லாப் பிரச்சினைகளுக்கும் நம்மாட்கள் எப்படி அடுத்தடுத்த நிமிஷங்களில் கருத்து சொல்கிறார்கள் என்பதை யோசித்துப்பாருங்கள்... பிரமித்துப் போவீர்கள். ஒருவர் ஒரு விஷயத்தில் நிபுணராக இருக்கலாம்; இரண்டு விஷயங்களில் நிபுணராக இருக்கலாம். அதெப்படி எல்லா விஷயங்களிலும்? தெரியவில்லை!

சமூக வலைதளங்களில் பின்னிஎடுக்கும் ஒரு நண்பர் சொன்ன தகவல் இது, “சனிக் கிழமை மதியத்துக்குப் பிறகு ஃபேஸ்புக்கில் போடும் ஸ்டேட்டஸுக்கு மதிப்பு கிடையாது. காலையில் 11 மணிக்கும் மதியம் 3 மணிக்கும் ஸ்டேட்டஸ் போட்டுப்பாருங்கள், நல்ல ஹிட்ஸ் அள்ளும்.”

நம்மூரில் வணிக நிர்வாகவியல் படிப்புகள் வந்த புதிதில், அதற்காகப் பிரத்யேக மாகப் பேராசிரியர்கள் யாரும் கிடையாது. கல்லூரிகளில் என்ன செய்வார்கள் என்றால், பெரிய நிறுவனங்களில் இருக்கும் அதிகாரிகளை அழைத்து வந்து, எப்படி நிறுவனங்களை நடத்த வேண்டும், பிரச்சினை களை எப்படிக் கையாள வேண்டும் என்று பாடம் எடுப்பார்கள். கூடிய சீக்கிரம், அதுபோல டி.வி. சேனல்களுக்குச் செல்லும் முன்பு அங்கு இருப்பது நீல நிற மேடைப் பின்னணியா, பச்சை நிறப் பின்னணியா; எந்தப் பின்னணிக்கு எப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும்; நாற்காலியில் நேராக அமராமல் கால் மேல் கால் போட்டு 40 டிகிரி கோணத்தில் சாய்வாக ஏன் அமர வேண்டும்; எதை எடுத்தாலும் முந்திக்கொண்டு எப்படிக் கருத்துச் சொல்ல வேண்டும்; ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவிக்கும்போது எந்தக் கிழமை எந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றெல்லாம் வகுப்புகள் நடத்துவார்கள்போல கருத்துப் புயல்கள்.

“இர்பான் பதான் பந்து வீசும் சமயத்தில் என் அருகில் இன்னொரு வர்ணனையாளராக வாசிம் அக்ரம் இருப்பார். அதுபோன்ற சமயத்தில் நான் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ பற்றிப் பேசக் கூடாது என்பது எனக்குத் தெரியும்’’ - இது கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே சொன்ன வார்த்தைகள். சச்சின் எப்படி பேட் பிடிக்க வேண்டும் என்று கருத்துச் சொல்பவர்கள் பலர் கிரிக்கெட்டே தெரியாதவர்கள்.

கொஞ்சம் தெரிந்தவர்கள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றால், ஒன்றுமே தெரியாதவர்கள், “இப்போதுதான் படத்துக்குப் போனேன்; சாயங்காலம் குளிக்கப்போகிறேன்” என்றெல்லாம் பதிவு போட்டுக் கொல்கிறார்கள். ஸ்டேட்டஸ் போடுவது ஒரு போதை என்றால், எத்தனை லைக்ஸ் விழுந்திருக்கின்றன என்று எண்ணிக்கொண்டே இருப்பது போதை ஊறுகாய். மது போதைக்குக்கூட ஓர் எல்லை உண்டு. இந்த போதைக்கு?

வாசு கார்த்தி - தொடர்புக்கு: vasucarthi@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x