Last Updated : 17 Dec, 2013 10:03 AM

 

Published : 17 Dec 2013 10:03 AM
Last Updated : 17 Dec 2013 10:03 AM

உக்ரைனில் நடக்கும் நிழல் யுத்தம்

சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்த உக்ரைன், இப்போது தனி நாடாக இருந்தாலும் வர்த்தகம், பொருளாதாரம் போன்றவற்றுக்கு ரஷ்யாவையே அதிகம் சார்ந்து நிற்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக உறவை வளர்த்துக்கொள்ளப் பேச்சு நடத்தினாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியாமல் ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சிப் பின்வாங்கியது.

ஐந்து ஆண்டுகளாகப் பொருளாதார மந்த நிலையால் அமிழ்ந்து கிடந்த ஐரோப்பிய நாடுகள் மெல்லத் தலையெடுத்து வளர்ச்சியை எட்டுகின்றன. கிழக்கில் உள்ள உக்ரைன் போன்ற நாடுகளுடன் பொருளாதார, வர்த்தக உறவுகளை விரிவுபடுத்திக்கொள்ள விரும்புகின்றன. தன்னுடைய செல்வாக்குக்குக் கட்டுப்பட்டுக் கிடந்த உக்ரைன், இப்படித் தன்னைவிட்டுப் பிற ஐரோப்பிய நாடுகளுடன் போவதை ரஷ்யா விரும்பவில்லை. எனவே, சமாதானமாகப் பேசியோ மிரட்டியோ உக்ரனைத் தன்னுடனேயே வைத்துக்கொள்ள விரும்புகிறது.

அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ நாடுகளுக்கும் சோவியத் ஒன்றியம் தலைமையிலான ‘வார்சா’ ஒப்பந்த நாடுகளுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நிலவிய பனிப்போர் 21-வது நூற்றாண்டிலும் திரும்பிவிட்டதோ என்று நினைக்கும் அளவுக்கு இப்போது மோதல் வலுத்துக்கொண்டிருக்கிறது.

ரஷ்யாவின் எச்சரிக்கை

எங்களைவிட்டுப் பிரிந்துசென்றால், கடுமையான பொருளாதார, வர்த்தகத் தடைகளுக்கு உள்ளாக நேரும் என்று உக்ரனை, ரஷ்யா கடுமையாக எச்சரித்திருக்கிறது. அப்படிப் போகாமல் ரஷ்யாவுடனேயே தொடர்பை நீட்டித்தால், கோடிக் கணக்கான ரூபிள்களைச் செலவழிக்கத் தயார் என்று ஆசைகாட்டுகிறது. உக்ரைன் பிடியிலிருந்து நழுவிவிட்டால், கருங்கடல் பகுதியில் ரஷ்யக் கடற்படைக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும். பல்வேறு நாடுகளுக்கு உக்ரைன் வழியாகச் செல்லும் இயற்கை நிலவாயு, எண்ணெய்க் குழாய்ப் பாதைகளை ரஷ்யா இழக்க நேரும். எனவே சாம, தான, பேத, தண்ட வழிமுறைகளை ரஷ்யா கையாள்கிறது.

ஆனால், மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளோ ரஷ்யாவின் தீவிரத்துக்கு ஈடுகொடுக்காமல் சவசவவென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். “உங்கள் நாட்டு மக்களில் பெரும்பாலான மக்கள் எங்களுடன் வர்த்தக உறவை விரும்புகிறார்கள், அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்” என்று உக்ரைன் அதிபரைப் பார்த்துக் கெஞ்சுகின்றனர். இப்படித் தொடர்ந்து நெருக்கிக்கொண்டிருந்தால், அடுத்த அதிபர் தேர்தலில் யனுகோவிச் மண்ணைக் கவ்வ நேரும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், அவரைச் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றனர். உக்ரைனையும் தன்னுடைய சந்தையாக்கும் ஆசைதான் ஐரோப்பிய நாடுகளிடம் இருக்கிறதே தவிர, முழு மூச்சான முனைப்பு இல்லை.

உக்ரைனில் மிகப் பெரிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு ஐரோப்பிய நாடுகள் யனுகோவிச்சைக் கடந்த மாதம் வலியுறுத்தின. ஐரோப்பியப் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக தலைநகர் கீவிலும் முக்கிய நகரங்களிலும் நூற்றுக் கணக்கானோர் வீதிகளில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். யனுகோவிச்சுமே ஒரு கட்டத்தில் கையெழுத்திடத் தயாராக இருந்தார்.

உடனே, ரஷ்யா ருத்ரதாண்டவம் ஆடியது. தன்னுடன் செய்துகொண்ட பொருளாதார, வர்த்தக ஒப்பந்தங்களின்படி கடன்களுக்கான முதலையும் வட்டியையும் உடனே தீர்த்துவிட்டுத்தான் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தது. ஏற்கெனவே, தள்ளாடிக்கொண்டிருக்கும் உக்ரைனின் பொருளா தாரம் ரஷ்யா எடுக்கக்கூடிய தடை நடவடிக்கைகளால் சவக்குழிக்கே சென்றுவிடும் என்று அஞ்சியதால், யனுகோவிச் பின்வாங்கினார். இப்போது அவருக்கு எதிரான கிளர்ச்சி தீவிரமடைந்துவருகிறது.

ஐரோப்பிய நாடுகளின் மறதி

உக்ரைனை இப்போது இழுக்க முற்படுவதைப் போலவே முன்னரும் ஐரோப்பிய நாடுகள் முயன்றன. ஆனால், அரைகுறையான இந்த முயற்சிகளால் நன்மை ஏற்படாது என்பதை அவர்கள் மறந்துவிடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பிரேக் நகரில் 2009-ல் கூடி, சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவை வைத்துக்கொள்ள விரும்புவதாக அறிவித்தனர். அப்படி அறிவித்த உடனேயே ரஷ்யா அதை வன்மையாகக் கண்டித்தது. வர்த்தக உறவு என்ற பெயரில், இந்த நாடுகளைப் பிரித்து தனக்கு எதிராகத் திருப்பிவிட மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் சதிசெய்கின்றன என்று சாடியது. இந்த வர்த்தக ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு எதிரானது என்று அப்போது அதிபராக இருந்த மெத்வதேவ் வன்மையாகக் கண்டித்தார்.

அந்த மாதம் ‘நேட்டோ’ நாடுகள் தங்களுடைய ராணுவப் போர் ஒத்திகையை ஜார்ஜியா நாட்டில் நடத்தின. அந்த நாடும் சோவியத் ஒன்றியத்தின் அங்கமாக இருந்து விடுதலையான நாடுதான்.

“இந்த நாடுகள் அரசியல்ரீதியாக நிலையான ஆட்சியின் கீழ் வருவதும், வளம் பெறுவதும், வெளிப்படையான பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவுக்கும் நன்மை பயக்கும்” என்று ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைத் துறைத் தலைவர் ஜாவியர் சோலனா அப்போது சுட்டிக்காட்டினார்.

இரண்டு நிபந்தனைகள்

மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பொருளாதார, வர்த்தக உறவு வைத்துக்கொள்வது, ஐரோப்பியக் கண்டத்துக்கே நல்லது என்பது வெளிப்படையான உண்மைதான். ஆனால், அதற்காக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகள் விதித்த இரு நிபந்தனைகளும் யனுகோவிச்சால் நிறைவேற்ற முடியாதவை. யனுகோவிச்சின் அரசியல் எதிரியும் முன்னாள் பிரதமருமான யூலியா தைமஷென்கோவைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்ற மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகள்.

உக்ரைனைத் தங்கள் பக்கம் கொண்டுவர அதற்குத் தேவைப்படும் நிதியுதவியை அளிக்க பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் பேசுகின்றனர் ஐரோப்பியத் தலைவர்கள். ஆனால், அதில் வேகம் போதவில்லை. அதேசமயம், புதினைச் சந்திக்கவிருக்கும் யனுகோவிச் தங்கள் நாட்டுக்குத் தேவைப்படும் உதவிகளையும் சலுகைகளையும் அதிகம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

யனுகோவிச்சுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்வது ஒருபக்கம் இருக்கும் அதே வேளையில், நாட்டின் பெரிய தொழிலதிபர்களும் அவர்களுக்கு ஆதரவாக இறங்கியிருக்கிறார்கள். உக்ரைன் அரசின் ஊழலும் தொழில் - வர்த்தகத்தில் அரசின் தலையீடும் அவர்களைக் கோபப்படுத்தியிருக்கிறது. அத்துடன் தங்களுடைய வீடுகளிலும் அலுவலகங்களிலும் திடீர் திடீரென சோதனை போட்டுத் துன்புறுத்துவதையும் அவர்கள் விரும்பவில்லை.

ரஷ்யா உதவிகளைச் செய்தாலும், அந்தக் கடன்களுக்கு அநியாய வட்டி செலுத்த வேண்டியிருப்பதாக உக்ரைன் அரசு உயரதிகாரிகளே தெரிவிக்கின்றனர். எனவே, குறைந்த வட்டிக்கு வேறு யாராவது கடன் கொடுத்தால், உக்ரைன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் செல்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். பன்னாட்டுச் செலாவணி நிதியம் கடன் கொடுத்தாலும், அவர்கள் விரும்பும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை உக்ரைன் அரசு வேகமாகச் செய்யும் என்பதற்கு நிச்சயமில்லை. எனவே, கடன் கொடுப்பதும் ஆபத்துதான் என்ற எண்ணமும் வங்கித் தலைவர்களிடம் இருக்கிறது.

உக்ரைன் மட்டுமல்ல, சோவியத் ஒன்றியத்தில் முன்னர் இருந்த மால்டா, ஜார்ஜியா ஆகியவற்றுடனும் வர்த்தக உறவுகளை வளர்த்துக்கொள்ள மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. உக்ரைனில் இப்போது நடக்கும் கிளர்ச்சி வெறும் வர்த்தக உறவுக்காக மட்டுமல்ல, அரசியல், ராணுவக் காரணங்களுக்காகவும் என்பதே உண்மை. இந்தக் கிளர்ச்சியை யார் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

© நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x