

2025இல் தமிழகம் சந்தித்த முக்கிய நிகழ்வுகளில் பலவும் பேசுபொருளாகவே இருந்தன. சில நிகழ்வுகள் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவரானது ஒரு முக்கியமான அம்சம். கடைசியாக, 1982-87இல் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் அந்தப் பதவியை அலங்கரித்தது நினைவுகூரத்தக்கது.
ஆளுநர் - அரசு மோதல்: சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறினார். சட்டமன்றத்தில் 2023இல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை சர்ச்சையான நிலையில், 2024இல் உரையின் தொடக்கத்தை மட்டுமே வாசித்துவிட்டு மற்றவற்றைத் தவிர்த்தார்.
ஆக, 2025இலும் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்தச் சர்ச்சை நீடித்தது. வேறொரு வழக்கில் தமிழக அரசு - ஆளுநர் மோதலுக்கு, ‘நீங்களாகவே சுமுகத் தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டுத் தீர்வு காண நேரிடும்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தியதும் கவனிக்கத்தக்கது.
கரூர் துயரம்: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தேசிய அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. கெடுவாய்ப்பாக அரசியல் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிக உயிரிழப்பு ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தாகப் பதிவான இந்தச் சம்பவம், அரசியல்ரீதியாக திமுக அரசுக்கும் தவெகவுக்கும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
இதுபோன்ற கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி அப்பாவிப் பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் உயிரிழப்பதைத் தடுப்பதில் வாக்கு அரசியலில் ஈடுபடும் கட்சிகள் அக்கறை காட்ட வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியது.
கனக்க வைத்த மரணம்: 2020இல் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல் நிலையத்தில் வதைக்கு உள்ளாகிக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு ஒன்றில் விசாரணை என்கிற பெயரில் தனிப்படை காவலர்களால் கொல்லப்பட்டது காவல் மரணத்தின் கொடூரத்தை மீண்டும் அம்பலப்படுத்தியது. இது தமிழக அரசுக்கும் அவப்பெயரைப் பெற்று தந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.