Last Updated : 04 Jul, 2016 09:52 AM

 

Published : 04 Jul 2016 09:52 AM
Last Updated : 04 Jul 2016 09:52 AM

மாணவர் ஓரம்: ஒரு பொருளாதார மலரும் நினைவு

‘அந்த நேரத்துல வீட்டுல ரொம்ப கஷ்டம். வீடே ‘நிறைஞ்ச பாக்கியமா’ இருந்துச்சு. ஒரு பொட்டுத் தங்கம் இல்ல. எல்லாத்தையும் அடகுவச்சுத்தான் சமாளிச்சோம்” என்று சொல்லும் அளவுக்குப் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு கசப்பான கடந்தகாலம் இருக்கும். அப்படிப்பட்ட நிலை 1990-களில் இந்தியாவுக்கே இருந்தது.

அப்போது வளைகுடா நாடுகளில் போர் நடந்தது. எண்ணைய் விலை உயர்ந்தது. உலக நாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய தொகை பல மடங்கு அதிகரித்தது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு கரைந்தது. இரண்டு வாரங்களுக்கான இறக்குமதிகளைச் சமாளிக்கும் அளவுதான் நம்மிடம் பணம் இருந்தது. சர்வதேச நிறுவனங்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை ஒரு நாடு திரும்பத் தர முடியாமல் போவது என்பது அவமானமாகக் கருதப்படும். அதன் பிறகு, உலக நாடுகளிடம் நம்பிக்கை போய்விடும்.

அந்தக் காலகட்டத்தில் பிரதமராக சந்திரசேகர் இருந்தார். அவரது அரசாங்கம் இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறியது. அப்போதுதான் இந்தியா டன் கணக்கில் தங்கத்தை உலக வங்கியில் அடகு வைக்கும் நிலைக்கு வந்தது. அவருக்கு அடுத்தபடியாக 1991 ஜூன் 21-ல் பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு நாட்டின் பொருளாதார நிலை பற்றி உயர் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். ரூபாயின் மதிப்பைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்கள். நரசிம்ம ராவ் பதவியேற்றதும் அவரது அலுவலகத்தில் இரவு பகலாகத் தொடர் கூட்டங்கள் நடந்தன. நிதியமைச்சகமும் ரிசர்வ் வங்கியும் பரபரப்பாக இயங்கின. பிரதமர் நரசிம்ம ராவும் நிதியமைச்சர் மன்மோகன் சிங்கும் நிலைமையைச் சிறப்பாகச் சமாளித்தனர்.

ஜூலை 1 மற்றும் 3 தேதிகளில் இரண்டு கட்டமாக ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டது. பலவிதமான எதிர்ப்புகள் கிளம்பின. உலக வங்கியின் நிர்ப்பந்தத்துக்கு நாடு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ‘‘உலக சமூகம் சந்தோஷப்படுவதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்தால் நம் நாட்டின் பொருளாதாரம் மீது அவர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும்” என்றார் மன்மோகன் சிங்.

இன்றைக்கு ரூபாய் ஒரு நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக உருவாகியுள்ளது. அப்போதைய பொருளாதார நிலையைவிட மேம்பட்டதாக நாடு தற்போது மாறியுள்ளது. தங்கம் உள்ளிட்ட அந்நியச் செலாவணி கையிருப்புகள் 11 மாதங்களுக்குத் தேவையான அளவு நம்மிடம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x