Published : 07 Jul 2016 09:23 AM
Last Updated : 07 Jul 2016 09:23 AM

மாணவர் ஓரம்: உலக வர்த்தக நிறுவனமும் இந்தியாவும்

உலகமயமாதல் என்பதற்கான பொருளியல் அர்த்தம், நாடுகளிடையே பொருட்கள், பணிகள், முதலீடுகள் எல்லாம் தடையின்றிச் சென்று வர வேண்டும். அதாவது, 1.ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் தடை இருக்கக் கூடாது. அதன்மீது வரி விகிதங்களும் குறைவாக இருக்க வேண்டும். 2. முதலீடுகள் தடையின்றி வந்து செல்ல வேண்டும். இதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, ஒரு நாட்டின் நாணய மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, அரசு தன்னிச்சையாக நாணய மதிப்பை நிர்ணயிக்கக் கூடாது.

1992-93 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்கான உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டது. அந்நியச் செலாவணி சந்தையை உருவாக்கவும், படிப்படியாகச் சந்தை முறையில் ரூபாய் மாற்று மதிப்பை நிர்ணயிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1993 டிசம்பர் 15-ல் உலக வர்த்தக நிறுவனம் (WTO) உருவாக்க வரையப்பட்ட உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. அதன் உறுப்பு நாடாகவும் சேர்ந்தது.

இந்த அமைப்புதான் இன்று உலக நாடுகளின் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பொருளாதார அம்சங்களையும் தீர்மானிக்கிறது.

இந்திய இறையாண்மையை எதிர்க்கும் உலக வர்த்தக நிறுவனம் போன்ற ஓர் அமைப்பை ஏற்கக் கூடாது என்றும், இதன் பல அம்சங்கள் இந்திய மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் எதிரானது என்றும் விமர்சனக் குரல்கள் எழுந்தாலும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும், 128 நாடுகளும் கையெழுத்திட்டன. ‘இதனால் பன்னாட்டு வர்த்தகம் வளர்ந்து, எல்லா நாடுகளின் பொருளாதாரங்களும் வளரும். மிகக் குறைந்த வளர்ச்சி உள்ள நாடுகளுக்குச் சலுகைகள் உண்டு. எனவே, சிறிய மற்றும் வளரும் நாடுகள் அச்சம் அடையத் தேவை இல்லை’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பன்னாட்டு வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல அம்சங்களில் சட்டரீதியான மாற்றங்களைச் செய்து, இப்போது முழுமையாக உலகப் பொருளாதாரத்துடன் இணைந்த ஒரு நாடாக உள்ளது இந்தியா!

- இராம.சீனுவாசன், பேராசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x