Last Updated : 10 Apr, 2019 10:32 AM

 

Published : 10 Apr 2019 10:32 AM
Last Updated : 10 Apr 2019 10:32 AM

காஷ்மீரின் சுயாட்சிக் குரல்: தேசிய மாநாட்டுக் கட்சி

ஷேக் அப்துல்லா, சௌத்ரி குலாம் அப்பாஸ் இருவரும் 1932-ல் ‘அனைத்து ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் தேசிய மாநாடு’ கட்சியைத் தொடங்கினர். 1939-ல் இக்கட்சி தனது பெயரை ‘அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு’ என்று மாற்றிக்கொண்டது. ‘முஸ்லிம்’ என்ற வார்த்தையைப் பெயரிலிருந்து நீக்கிக்கொண்டது. ஷேக் அப்துல்லாவின் அரசியல் நிலைபாட்டை முழுதாக ஏற்காத குலாம் அப்பாஸ் 1941-ல் மீண்டும் ‘முஸ்லிம் மாநாடு’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

இந்தியாவுடன் காஷ்மீர் சமஸ்தானம் 1947-ல் சேர்ந்ததை ‘அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி’ ஆதரிக்கிறது. இந்திய ஆதரவு நிலையை எடுத்தாலும், மாநிலத்தின் சுயாட்சியைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ள தனி அந்தஸ்தை நீக்கக் கூடாது என்பது இதன் முக்கியக் கோரிக்கை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370-வது கூறின்படி காஷ்மீரின் தனித்தன்மை காப்பாற்றப்படுவதை, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் உறுதிசெய்துவருகிறது.

1947-க்குப் பிறகு ‘தேசிய மாநாட்டுக் கட்சி’ தனித்தும் கூட்டணி அமைத்தும் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. 1951 செப்டம்பருக்குப் பிறகு நடந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்டமன்றத்தின் 75 தொகுதிகளிலும் தேசிய மாநாடு வென்றது. 1953 ஆகஸ்ட் வரையில் ஷேக் அப்துல்லா, மாநிலத்தின் பிரதமராகப் பதவியில் நீடித்தார் (அப்போது காஷ்மீர் முதலமைச்சர், ‘பிரதமர்’ என்றே அழைக்கப்பட்டார்).  ஷேக் அப்துல்லா இந்திய அரசுக்கு எதிராக  ‘சதி செய்ததாக’ குற்றஞ்சாட்டப்பட்டு அவரது பதவி பறிக்கப்பட்டது.

1965-ல் தேசிய மாநாடு, இந்திய தேசிய காங்கிரஸுடன் இணைந்தது. அக்கட்சி காங்கிரஸின் ஜம்மு-காஷ்மீர் கிளையாகச் செயல்பட்டது. மீண்டும் அரசுக்கு எதிராக ‘சதி செய்ததாக’, 1965-ல் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் ஷேக் அப்துல்லா பிரதமராகத் தொடர்ந்திருந்தால் காஷ்மீர் பிரச்சினையில் சுமுகமான தீர்வுகள் ஏற்பட்டிருக்கக்கூடும். 1975-ல் மத்திய அரசுடன் பேசி ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு, தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் ஷேக் அப்துல்லா. 1982-ல் அவருடைய மறைவுக்குப் பிறகு அவருடைய மகன் பாரூக் அப்துல்லா முதலமைச்சரானார். ஷேக் அப்துல்லா, அவருடைய மகன் பாரூக் அப்துல்லா, அவருடைய மகன் உமர் அப்துல்லா என்று மூன்று தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவருகிறார்கள்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுடனும் தேசிய மாநாட்டுக் கட்சி உறவும் பூசலுமாக இருந்துவருகிறது. இக்கட்சியிலிருந்து பிரிந்த முப்தி முகம்மது சய்யீத் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (பிடிபி) என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அரசு அமைத்தது. ஆனால், பாஜக அந்த அரசிலிருந்து வெளியேறியதுடன் பேரவையையும் கலைத்துவிட்டது. இப்போது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x