பதவியேற்காத வெற்றி வேட்பாளர்

பதவியேற்காத வெற்றி வேட்பாளர்
Updated on
1 min read

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் அருப்புக்கோட்டை மக்களவைத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றார். மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, சட்டமன்ற உறுப்பினரானார். அடுத்து, 1957-ல் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில்,  ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களவைத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். வழக்கம்போல, இரண்டிலுமே  வெற்றிபெற்றார். ஆனால், இரண்டாவது தடவை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார். 1962 தேர்தலின்போது அருப்புக்கோட்டை மக்களவைத் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டார்.  உடல் நலக் குறைவின் காரணமாக, ஒரே ஒரு மேடையில் மட்டுமே பேசினார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றாலும், டெல்லி செல்லவில்லை. அவரது உடல்நலக் குறைவை கருத்தில் கொண்டு, ஆறு மாதத்திற்குள் பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையைத் தளர்த்தினார் பிரதமர் நேரு. உடல்நிலை மேலும் மோசமானதால், தேர்தலில் வென்றும் பதவியேற்காமலே காலமானார் முத்துராமலிங்கத் தேவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in