

நாடு விடுதலை அடைவதற்கு முன் ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்பது ஒருவித ஊசலாட்டத்தில் இருந்தது. விடுதலைக்குப் பிறகு, பத்திரிகைகள் உண்மையான சுதந்திரத்தை அனுபவித்தன. பிரதமர் நேரு அதற்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார். பிரிட்டனில் உள்ள ஹாரோ பொதுப் பள்ளியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்ற நேருவுக்கு ஜனநாயகம் குறித்து நன்றாகத் தெரிந்திருந்தது.
ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்லச் சரியான கொள்கை தேவை என்பதை உணர்ந்திருந்தார்; ஜனநாயகரீதியிலான விமர்சனங்களை வரவேற்றார்; அத்தகைய விமர்சனம், அரசியல் கட்சிகள் மூலமாகவோ, பத்திரிகைகள் மூலமாகவோ வெளிப்படலாம் என்றே கருதினார்; சுதந்திரப் போராட்டத்தில் மக்களை ஒன்றிணைக்கப் பத்திரிகைகள் ஆற்றிய சக்திமிக்க பங்களிப்பையும், சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டைக் கட்டமைக்கப் பத்திரிகைகள் ஆற்றிவரும் பங்கையும் அவர் நன்கு அறிந்திருந்தார்.