

சி.சு. செல்லப்பா, ‘பெண்டிழந்தான்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். ஜோடி மாடுகளில் ஒன்று நல்ல நடை மாடு; மற்றொன்று தொங்கோட்ட மாடு. நடை மாட்டுக்கு நடை மாடு ஜோடி சேர்ப்பது வழக்கம். அப்படிச் சேர்த்தால் மாடுகளுக்கு அலுப்பு நேராது; அலுங்காமல் குலுங்காமல் வேலையில் அழகுக் கொடுக்கும்.
நடைமாட்டுக்கு, அத்திக்கோம்பை திருவிழாவில் ராமருக்கு லட்சுமணன் மாதிரி, கொம்புதலை ஓர்சான முகவெட்டில் காளை கிடைக்கிறது. பண்ணையார் சிவராம ஐயர் காளையைத் தேடி வந்ததுபோல, ஜமீன்தாரும் ஜோடி எடுக்க வருகிறார். இவர் காளை அவருக்கும், அவர் காளை இவருக்கும் ரொம்பவே பிடித்துவிடுகிறது. யாருக்கு யார் விட்டுக் கொடுத்தார், ஏன் விட்டுக் கொடுத்தார் என்பதுதான் கதை. இதில் மாடு பற்றிய அத்தனை நுணுக்கங்களையும், மனிதர்களின் அத்தனை எண்ண ஓட்டங்களையும், வண்டி ஓட்டும் சாகசக் கைவரிசைகளையும், சொற்களுக்கு அப்பால் இயக்கத்திலேயே அள்ளி அணைத்துத் தரும் மகத்தான கலைமேன்மை இந்தக் கதையில் உச்சமாக நிகழ்ந்திருக்கிறது.