

ஒடியா இலக்கியத்தின் மகத்தான நாவல்களை எழுதியவர் என்று கோபிநாத் மஹாந்தி கொண்டாடப்படுகிறார். இவரது ‘தனாபானி’ என்ற நாவல் ‘சோறு தண்ணீர்’ என்ற பெயரில் பானுபந்த்தால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஒடியா நாவலாசிரியர் கோபிநாத் மஹாந்தி.
வியாபார நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றும் பலிதத் என்ற இளைஞன், தனக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களைப் பேசுகிறது இந்த நாவல். நாவலின் தொடக்கத்தில் உயரதிகாரி வீட்டிற்குச் செல்கிறான் பலிதத். அங்கே துரையின் மனைவி, தனது தோட்டத்திலுள்ள ரோஜாச் செடிகளுக்குப் பன்றி எரு போட்டால் பெரிய பூக்களாக மலரும் என்கிறாள். இதற்காகப் பன்றி எரு சேகரிக்கப் போகிறான் பலிதத்.