

இந்த ஆண்டு (2025) இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த நாவலாசிரியர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்காய்க்கு (László Krasznahorkai) அளிக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் அடர்த்தி, இருண்மையின் அதிசயம் ஆகியவற்றின் மீதான அவரது படைப்புகளின் தனித்துவமான பார்வைக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு குறிப்பிடுகிறது. லாஸ்லோ, “பல தசாப்தங்கள், பல்வேறு நிலப்பரப்புகள் தாண்டித் தன் கடுமையான பரிசோதனை முறை சார்ந்த எழுத்தைத் தக்கவைத்துக்கொண்டவர்.
புனைவெழுத்துக்கும் செய்தித்தாள் அறிக்கை எழுத்துக்கு இடையிலும், ஹங்கேரி, கிழக்கு ஆசியா, ஜெர்மனி போன்ற நிலங்களுக்கு இடையிலும் சகஜமாக நகர்ந்தவர்” என்று நோபல் கமிட்டி குறிப்பிடுகிறது. “அழகியலும் உன்னதமும் இலக்கியத்தில் எவற்றையும் சாராது தன்னளவிலேயே இயங்க முடியும் என்பதையும், இலக்கியம் அல்லாத பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு அப்பாலும் இன்னமும் இலக்கியம் வாசிக்கப்படுகிறது என்பதையும் இவ்விருது நிரூபித்திருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் லாஸ்லோ.