

உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவது தடுப்பாற்றல் மண்டலம் (Immune system). அது தன்னிச்சையானது; அதை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த அமைப்பும் இல்லை என்றுதான் மருத்துவ உலகம் இதுவரை எண்ணிக்கொண்டிருந்தது. அப்படியல்ல, தடுப்பாற்றல் மண்டலத்தை ஒழுங்குபடுத்தவும் ஓர் அமைப்பு இருக்கிறது என்று அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. ப்ருன்கோவ் (Mary E. Brunkow), ஃபிரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell), ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகிய மூன்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்புக்காக 2025க்கான நோபல் பரிசு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “உடலின் சக்திவாய்ந்த தடுப்பாற்றல் மண்டலம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அது நம் உடல் உறுப்புகளையே தாக்கிவிடும். இதைத் தடுப்பதற்கு ஒரு தடம் உள்ளது” என்கிறார்கள் இவர்கள். இதைப் புரிந்துகொள்ள, தடுப்பாற்றல் மண்டலத்தின் அரிச்சுவடியைத் தெரிந்துகொள்ள வேண்டும்.