நெருப்பில் பிறந்தவள் | நாவல் வாசிகள் 26
பாஞ்சாலி, கிருஷ்ணை, யக்ஞசேனி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் திரௌபதியின் வாழ்க்கையை ஒரியா எழுத்தாளர் பிரதிபாராய் ஒரு நாவலாக எழுதியிருக்கிறார். கிருஷ்ணனுக்கு எழுதப்படும் கடிதம் போன்ற வடிவம் கொண்ட ‘யக்ஞசேனி’ நாவல், சாகித்ய அகாதமி பரிசு பெற்றுள்ளது. இதனை இரா.பாலச்சந்திரன் ‘திரௌபதியின் கதை’ எனத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
மகாபாரதத்தில் திரௌபதியாக நெருப்பில் தோன்றுகிறாள். அவளது பிறப்பிற்கே ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மகளாக, மனைவியாக, அன்னையாக, சேடியாக, ராணியாக அவள் கொண்ட மாற்றங்களும், அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் இந்த நாவலில் பிரதிபாராய் விவரிக்கிறார். நாவலில் திரௌபதி தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டவராகக் கிருஷ்ணரை மட்டுமே நினைக்கிறாள். ஆகவேதான் அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். எனது இரத்தத்தால் எழுதப்பட்ட இந்தக் கடிதம், மரணத்தை நோக்கிய எனது கடைசி யாத்திரையின் ஒரே துணை எனத் திரௌபதி குறிப்பிடுகிறாள். மகாபாரதத்தில் இல்லாத சில கற்பனை சம்பவங்கள் மற்றும் துணை கதாபாத்திரங்கள் மையக் கதையில் இணைக்கப்பட்டுள்ளன.
