மொழிபெயர்ப்பு முன்னோடி: சரஸ்வதி ராம்நாத்
1986இல் சென்னை திருவல்லிக்கேணியில் பாதையோரப் பழையப் புத்தகக் கடை ஒன்றிலிருந்து சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று ‘ஜெய சோம்நாத்’ என்ற குஜராத்தி நாவல். இது, இந்தி வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.
கே.எம்.முன்ஷி என்னும் பெயரை அட்டையில் பார்த்துவிட்டுத்தான் அப்புத்தகத்தை வாங்கினேன். ஜெய சோம்நாத் நாவலை ஆர்வமுடன் ஒரே நாளில் படித்து முடித்தேன். ஒருபுறம் கஜினி முகம்மதுவின் படையெடுப்பினால் சோமநாத் நகரம் அழிவுக்குள்ளாகிறது. இன்னொருபுறம் கோயிலில் நடனமாடுவதற்காக வந்த செளலா என்னும் நடனக்காரிக்கும் அந்த ஊரைச் சேர்ந்த பீம்தேவ் என்னும் வீரனுக்கும் இடையில் அரும்பிய காதலும் அழிந்துபோகிறது. இருவித அழிவுகளை அருகருகில் நிறுத்தி இணைத்த நாவலின் கட்டமைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தமிழ் நாவலைப் படிப்பதுபோலவே நான் அந்த மொழிபெயர்ப்பு நாவலை அன்று படித்து முடித்தேன். அந்த மொழிபெயர்ப்பாளரின் பெயர் என் மனதிலேயே நின்றுவிட்டது. அவர் சரஸ்வதி ராம்நாத்.
