

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் குறியீடாகக் கருதப்படுகின்ற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம் செய்திகளில் ஒவ்வொரு வருடமும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஆளும் கட்சியும், அதன் அரசியல் தலைவர்களும் இதைத் தங்கள் சாதனை என்றும், இது சிறந்த பொருளாதார மேலாண்மைக்கான ஆதாரம் என்றும் கொண்டாடுகிறார்கள்.
இந்த ஆண்டு, தமிழ்நாடும் இந்தப் பட்டியலில் இணைந்து, 2024-25ஆம் நிதியாண்டுக்கான இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தைப் பெருமையுடன் கொண்டாடிவருகிறது. பொதுவாக, 6-7% வளர்ச்சி விகிதம் என்பது சாதாரண மக்களை ஈர்க்கக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால், தரவுகளையும், வளர்ச்சி சார்ந்த யதார்த்தங்களையும் நன்கு அலசிப்பார்த்தால், வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் எப்போதும் முழுமையான உண்மையைக் கூறுவதில்லை என்பது புரியும். வளர்ச்சி விகிதம் பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு குறிகாட்டியாக மட்டுமே இருக்க முடியும். அவை மட்டுமே, அனைத்துப் பிரிவினரின் வருமானமும் உயர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தாது. உண்மையான வளர்ச்சி குறித்த நேர்மையான விவாதத்தை நாம் நடத்த வேண்டுமானால், அந்த வளர்ச்சி விகிதத்துக்குப் பின்னால் ஒளிந்துள்ள உண்மைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.