

தமிழகத்தில் சிறுநீரக தானம் என்கிற பெயரில் சட்ட விரோதச் சிறுநீரகத் திருட்டு நடைபெறுவதாக எழுந்திருக்கும் புகார்கள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களின் உயிரைக் காப்பதற்காகக் கண்டறியப்பட்ட மருத்துவச் சிகிச்சை முறைகளைச் சிலர் தனிப்பட்ட லாபத்துக்காகச் சட்ட விரோதமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டிய தருணம் இது.
தமிழகத்தில் பல ஆண்டுகளாகச் சட்ட விரோதச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுவந்தாலும் அண்மையில் நாமக்கல் பகுதியில் விசைத்தறி - சாயப் பணியாளர்கள் மத்தியில் இடைத்தரகர்கள் மூலம் சிறுநீரகத் திருட்டு நடைபெறுவதாக எழுந்திருக்கும் புகார்கள், மீண்டும் இதைப் பேசுபொருள் ஆக்கியிருக்கின்றன. பணத்தின் அடிப்படையில் நிகழும் சட்ட விரோத உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளைத் தடைசெய்யும் பொருட்டு, ‘மனித உறுப்புகள் - தசைகள் மாற்று அறுவைசிகிச்சைச் சட்டம்’ 1994இல் நடைமுறைக்கு வந்தது.