

‘இந்தியப் புள்ளியியலின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலானபிஸ் (Prasanta Chandra Mahalanobis). சுதந்திர இந்தியாவுக்கான பொருளாதாரத்தைக் கட்டமைத்து அதைச் சிறப்பாக வழிநடத்தியதிலும், புள்ளிவிவரங்களை நாடு தழுவிய அளவில் சேகரித்ததிலும் மஹலானபிஸின் பங்கு மகத்தானது. புள்ளியியலில் அவரது மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், ஜூன் 29ஆம் தேதி, தேசியப் புள்ளியியல் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான புள்ளியியல் நாள் கருப்பொருள் ‘75 ஆண்டு கால தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு’ (75 Years of National Sample Survey). மாதிரிக் கணக்கெடுப்பு என்பது தனிமனிதர், குடும்பம், தொழில் நிறுவனம் போன்ற முதன்மை அலகுகளில் இருந்து தரவுகளைத் திரட்டுவதிலும், திரட்டப் பட்ட தரவுகளைக் கொண்டு வறுமை ஒழிப்பு, வருவாய் ஏற்றத்தாழ்வு, முறைசாராத் தொழிலாளர் நலன், குடும்ப நலன் போன்றவை தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதிலும் சிறப்பான பங்கை ஆற்றிவருகிறது.