

நாங்கள் மொழி அருங்காட்சியகத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். ஆனால், இயந்திரக் கற்றல் குறித்து, வரும் வழியில் உரையாடல் தொடர்ந்தது. ஓட்டுநர் தேவைப்படாத ஒரு வண்டியில் உட்கார்ந்துகொண்டு அரட்டையடிப்பதைத் தவிர வேறென்ன வேலை? “ஆனால் கவின், நாம் பேசிய இந்தக் கற்றல் முறைகள் எல்லாம் பல பத்தாண்டுகளாகப் பெரும்பாலும் ஆராய்ச்சிக்கூடங்களில் மட்டுமே இருந்தன. அது பொது நடைமுறைக்கு வருவதற்குக் காலம் பிடித்தது.
அதற்கான பொற்காலம் வருவதற்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. 2000களிலும் 2010களிலும் ஒரு மாயாஜாலம் நடந்தது. அதன் பிறகு எல்லாம் மாறியது. மூன்று முக்கிய சக்திகள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடின. அது செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது.”