

சாமானியர்கள் கடன் கேட்பதற்காகத் தயக்கமும் கவலையுமாக நிற்பதைக் கண்டிருக்கிறோம். அதே போல ஒரு நாட்டின் மன்னரும் கடன் கேட்பதற்காக நின்றிருப்பார் என்பது நாம் கற்பனை செய்யாதது. அப்படி ஒரு காட்சி கிரண் நகர்க்கர் எழுதிய ‘கனவில் தொலைந்தவன்’ நாவலில் இடம்பெறுகிறது. 16 ஆம் நூற்றாண்டில், ராஜஸ்தானத்து அரச குடும்பத்திற்குள் நடந்த வாரிசு சண்டையை நாவல் விவரிக்கிறது. சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள இந்த நாவலை அக்களூர் ரவி சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
மேவாரின் மன்னர் ராணா தொடர்ந்து யுத்தம் செய்து கொண்டேயிருக்கிறார். இதனால் தேசத்தின் கஜானா வற்றிவிடுகிறது. நாட்டின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் இளவரசன் மகாராஜ் குமார் படைவீரர்களுக்கு ஊதியம் அளிக்கவும், நிர்வாகச் செலவிற்கும் நிதி தேவை என்று உணருகிறார். அதற்காக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டும் என முடிவு செய்கிறார்.