

திருக்குறள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, நீலகேசி, மணிமேகலை போன்ற தமிழ் இலக்கியங்களை சமணச் சமய தமிழர்களே இயற்றியுள்ளனர். இவ்வாறு மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்த சமணம், பாண்டிய நாட்டுக்கு / தமிழ்நாட்டுக்கு எங்கிருந்து வந்தது, எவ்வாறு வேர் ஊன்றியது, எப்படித் தழைத்துப் பரவியது, கி.பி. 13/14-ம் நூற்றாண்டுக்குப் பிறகு எப்படி மறைந்து போனது என்பது பற்றியெல்லாம் அணு, அணுவாக ஆராய்ந்து ‘பாண்டிய நாட்டில் சமண சமயம்’ என்ற இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி, மதுரா, பாட்னா, இராஜகிருகம், உஜ்ஜயனி, பாவாபுரி, குண்டப்பூர், அயோத்தி, லக்னௌ, ஒடிசா மாநிலத்தில் உள்ள உதயகிரி, கண்டகிரி, மௌரியர், குப்தர், குஷானர் காலத்து சமணம் சார்ந்த இடங்கள் மற்றும் வட இந்திய அருங்காட்சியங்களுக்கு எல்லாம் சென்று அங்கெல்லாம் எவ்வாறு சமணம் தழைத்தது என்பது பற்றி ஆராய்ந்து ஆய்வாளர் வேதாசலம் இந்நூலை எழுதியுள்ளார்.