

நாடாளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பில் மக்கள்தான் சர்வ வல்லமை படைத்தவர்கள். இந்த அடிப்படையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளின் மூலமாகத் தங்களின் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் அத்தகைய மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது. இத்தகைய நாடாளுமன்றத்தில் மாநில மொழிகள் அங்கீகரிக்கப்படுமா என்னும் கேள்வி நீண்ட காலமாக ஒலிக்கிறது.
ஜனநாயகம், பிரதிநிதித்துவ அமைப்புகளின் (Representative Institutions) சாராம்சத்தை இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான நிர்வாக அமைப்புகளின் வேர்களிலும் நம்மால் காண முடிகிறது. எனினும், 1950 ஜனவரி 26இல்தான், முதல் முறையாக, நவீனக் கட்டமைப்புகளைக் கொண்ட நாடாளுமன்ற ஜனநாயக நாடாக இந்தியத் துணைக் கண்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்திய அரசமைப்பின்படி, ‘ஒன்றியச் சட்டமன்றம்’ (Union Legislature) தான் நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது. நாடாளுமன்றம் என்னும் புள்ளியை மையமாகக் கொண்டே இந்திய அரசியல் இயங்குகிறது.