

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலைப் பொழுது, தஞ்சைப் பகுதிக்கே உரிய நாட்டு ஓடுகளைச் சுமந்த ஒரு சிறு வீடு... அதன் வெளிப்புறத்தில் சிறு கற்களைக் கொண்டு செய்யப்பட்ட அடுப்பு. சாதாரண கிராமத்துப் பெண்மணிபோல ஒருவர் தன்னுடன் சில இளைஞர்களை அழைத்துவந்தார்.
அருகில் சேகரித்த விறகுகளைக் கொண்டு சமைக்கத் தொடங்கினார். நானும் என்னுடைய நண்பர்களும் பெரும் காந்தியப் போராளியான ஜகந்நாதனைப் பார்க்கப் போயிருந்தோம். அவர் அமைப்பில் உள்ள களப்பணியார்களுக்கு வீதி நாடகப் பயிற்சி அளிக்கவே அங்கு சென்றிருந்தோம். அவர் அங்கு இல்லை. எங்களைப் பார்த்த அந்த அம்மையார், “வாங்க நீங்களும் சாப்பிடலாம்” என்று அழைத்தார்.