

காலுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவு யுகம் யுகமாக இருக்கிறது. மண்ணும் பாதங்களும் இணைபிரியா நண்பர்கள் என்று ‘சூரியகாந்திப் பூவின் கனவு’ நாவலில் சையத் அப்துல் மாலிக் குறிப்பிடுகிறார் . சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இந்த அஸ்ஸாமி நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கரிச்சான்குஞ்சு தமிழாக்கம் செய்திருக்கிறார்.
வடகிழக்குப் பிரதேசத்தில் வாழுகிறவர்கள் தங்களுக்கென ஒரு தொன்மையான வரலாற்றைக் கொண்டுள்ளனர். ஒருபுறம் அவர்களின் வழிபாடு, சடங்குகள், நம்பிக்கைகள் அப்படியே பின்பற்றப்படுகின்றன. இன்னொரு பக்கம் காலனிய ஆட்சியால் உருவான மதமாற்றம், கல்வி வளர்ச்சி, நவீன வாழ்க்கை முறை, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் புதிய முகத்தை உருவாக்கியுள்ளது.