

புதிய வகை நெல் ரகங்கள் கண்டுபிடிப்பில் இந்தியா சாதனை படைத்துள்ளது. ஆமாம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) சமீபத்தில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) இரண்டு நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் வெளியிட்டதன் மூலம், இந்தியா விவசாயக் கண்டுபிடிப்புகளில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது. வேளாண் அமைச்சகத்தின் 2024-25ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, முதன்முதலாக சீனாவின் நெல் உற்பத்தியை (14.7 கோடி டன்) விஞ்சி, இந்தியா 14.95 கோடி டன் உற்பத்தி செய்து, உலகின் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது.
இது கூடுதலாக ஒரு சாதனை! அதேவேளையில், இது தொடர்பான சில முக்கியக் கேள்விகளும் எழுகின்றன. இந்தியா ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக நெல் பயிரிடும்போது, மரபணு திருத்தப்பட்ட நெல் தேவையா? புதிய நெல் ரகங்கள் பாதுகாப்பானவையா? இந்தியாவின் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில், 86%ஐக் கொண்டுள்ள குறு, சிறு விவசாயிகளுக்கு இப்புதிய ரகங்கள் பயனளிக்குமா?