

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாட வாழ்க்கையின் இருத்தலியல் புதிரின் மையம் என்னவென்றால், அதன் உள்ளடக்கம் அளப்பரிய வித்தியாசங்களின் நடனமாக இருந்தாலும், அதன் வெளிப்பாட்டு வடிவம் ஓயாத மறுநிகழ்வாகத் தோற்றம் தருவதுதான். ஒவ்வொரு தருணமும் தனக்குள் பதுக்கி வைத்துள்ள வித்தியாசம் அதை அபூர்வமாக, முன்னர் நிகழாததாக மாற்றிவிட முடியும் என்றாலும், மானுடத்தின் செயல்தர்க்கம் அதனை மறுநிகழ்வாகவே பற்ற முயலுவதால் அபூர்வத்தில் கவனம் கொள்வதில்லை.