

கோபிகிருஷ்ணனின் சிறுகதைகளைப் பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் பாட்டி கொடுக்கும் சுண்டைக்காய்ப் பொடி மருந்துதான் என் நினைவுக்கு வரும். வயிற்றுக்கு நல்லதென்று பாட்டி கொடுக்கும் பொடியில் வாயில் வைக்க முடியாத கசப்பு. அதற்காக பாட்டியோட, பாட்டியோட பாட்டி கண்டுபிடித்த உபாயம்தான் பொடியைத் தேனில் குழைப்பது. தேனில் குழைத்த பொடியின் ருசி கசப்பும் இனிப்புமானது. பழகிவிட்டால் கொஞ்சம் வினோதமான மசக்கையாகக்கூட மாறிவிடக்கூடியது. கோபிகிருஷ்ணனின் கதைகளும் அத்தகைய தேனில் குழைத்த சுண்டைக்காய் பொடிதான். வாழ்வின் கசப்புகளையும் சலிப்புகளையும் தன் பகடியின் தேனில் குழைத்து கலையாக்கியவர் கோபிகிருஷ்ணன்.
நகர்ப்புற நடுத்தரவர்க்க வாழ்வின் சலிப்பும், அபத்தமும் அதில் ஒரு நுண்ணுணர்வுள்ள மனம் ஆடும் ஊசலாட்டங்களும் போடும் வேஷங்களுமே கோபிகிருஷ்ணனின் கருப்பொருட்கள். ஆனால், வாழ்வின் அபத்தமும், மனித மனத்தின் ஊசலாட்டங்களும் என்ன புதிய கருப்பொருட்களா? சுமேரிய சுடுமண் பலகைகளில் கில்காமேஷ் எழுதப்பட்ட காலத்திலேயே அவை எழுதப்பட்டுவிட்டன. எனவே கோபிகிருஷ்ணனின் தனித்துவம் அவர் எழுதிய கருப்பொருட்களில் இல்லை.