

சென்னை நகரத்தின் வடக்குப் பக்கத்தில் பிரச்சினைகளை முடித்துக்கொண்டது போல், தெற்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் குப்பைகள் கொட்டுவதற்குத் தேர்ந்தெடுத்த கிராமம்தான் வேங்கடமங்கலம். தேர்ந்தெடுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தின் (சர்வே எண். 16/2) அருகிலேயே வேங்கடமங்கலம் ஏரியும் இருந்தது. ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டுக்கு உத்தரவிடும்படி நீதிமன்றத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நிபந்தனைகளும் நிதர்சனமும்: நகராட்சிகள் சார்பாக 2000ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் கண்டிப்புடன் செயல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினர். நகராட்சித் திடக்கழிவுக் கிடங்குக்கு 50 ஏக்கர் நிலத்தை மாற்றம் செய்த அரசு, சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, அழுகும் பொருள்கள் மட்க வைப்பதற்கான பகுதிக்கு எடுத்துச்செல்லப்படும். மட்கும் உரம் தயாரிக்கும் இடங்களிலிருந்து 300 மீட்டர் தொலைவுக்கு யாரும் நெருங்காமலிருக்கத் தடுப்புச்சுவர் அமைக்கப்படும்.