

ஆப்பிரிக்க இலக்கியத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியவர் கூகி வா தியாங்கோ. நம் காலத்தின் மாபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் அவர். காலனியம், நவகாலனியம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிவந்தார். கடந்த புதன் கிழமை தனது 87ஆம் வயதில் காலமானர் என்ற செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்த அவர் மகன் எண்டுகா, தன் தந்தை நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாகக் கூறினார். 1988இல் எனக்கு வ.கீதாவின் வழியாக அறிமுகமான பல ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் கூகியும் ஒருவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கவிதைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள், அரசியல் கட்டுரைகள், மொழியாக்கங்கள் என இலக்கியத்தின் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து எண்ணற்ற விருதுகள் படைத்த அவருக்கு ஐந்து முறை எதிர்பார்க்கப்பட்ட நோபல் பரிசு கிடைக்கவில்லை.
1964இல் அவர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல், ‘அழாதே, குழந்தாய்’ (Weep Not, Child). அவரது தாய்நாடான கென்யாவைத் தங்கள் காலனிகளில் ஒன்றாக மாற்றிய பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய, ஜோமோ கென்யாட்டாவின் தலைமையில் நடத்தப்பட்ட ‘மாவ் மாவ்’ இயக்கத்தின் காலத்தில் வழ்ந்த இரு குடும்பங்களைப் பற்றிய அரசியல் நாவல். ‘மாவ் மாவ்’ என்பது அந்தக் கிளர்ச்சியை இழிவுபடுத்த ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். அதன் உண்மையான பெயர் ‘நிலத்திற்கும் சுதந்திரத்திற்குமான கென்ய சேனை’. கென்ய விடுதலைப் போராட்டத்தையும், கிறிஸ்தவ மதத்திற்கும் கென்யாவின் மரபான வழிபாட்டு முறைகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளையும் மையமாகக் கொண்டு ‘ஒரு கோதுமை மணி’ (A Grain of Wheat). ‘குருதியின் இதழ்கள்’ (Petals of Blood) ஆகிய இரு நாவல்களையும் அவர் ஆங்கிலத்தில் எழுதினார்.