

உதகையில் தற்போது 127ஆவது மலர்க் கண்காட்சி நடைபெற்று முடிந்திருக்கிறது. நீலகிரியில் கொண்டாடப்படும் பெருவிழா இது. லண்டன் செல்சீ நகரம், அமெரிக்காவின் பிலடெல்பியா, பாஸ்டன் மாகாணங்கள் ஆகிய இடங்களில் நடைபெறும் மலர்க் கண்காட்சிகளைப் போலவே உதகையிலும் 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் 1896ஆம் ஆண்டு நீலகிரி வேளாண்மை - தோட்டக்கலை நிறுவனத்தால் முதல் மலர்க் கண்காட்சி தொடங்கப்பட்டது. மலர்களைக் காட்சிப்படுத்திக் காணும் ஐரோப்பிய மரபின் தொடர்ச்சியாகவே உதகையிலும் இது ஆரம்பிக்கப்பட்டது.