

ஒரு போரில் முதலில் பலியாவது உண்மை -இப்படிச் சொன்னவர் ஹிரம் ஜான்சன், அமெரிக்கர், செனட்டராக இருந்தவர். அது முதலாம் உலகப் போரின் காலம். அந்நாளில் வதந்திகள் வாய் வார்த்தையாகத்தான் பரவின.
இந்நாளில் அவை சமூக ஊடகங்களில் ஏறி இறக்கை கட்டிப் பறக்கின்றன. கடந்த சில வாரங்களில் சமூக ஊடகங்கள் வதந்திகளைப் பரப்புவதில் முழு மூச்சாக இயங்கின. அவை பொய்ப் படங்களையும் போலிக் காணொளிகளையும் தரித்து உண்மை வேடம் பூண்டன. அவை போர் வெறியை ஊதிப் பெரிதாக்கின. இந்தப் பொய்யுரையிலும் போர் வெறிப் பரப்புரையிலும் காட்சி ஊடகங்களும் இணைந்துகொண்டன.