

‘கணக்குப் பாடம் நடத்தச் செல்லும்போது கோபத்தை வாசலில் நிற்க வைத்துவிட்டு, நீங்கள் மட்டும் வகுப்பறைக்கு உள்ளே செல்லுங்கள்’ - ஆசிரியர் தேனி சுந்தர் எழுதிய ‘உங்க ஜட்ஜ்மென்ட் ரொம்பத் தப்பு சார்’ நூலை வாசித்தபோது கிடைத்த வார்த்தைகள் இவை. ‘கணக்கும் இனிக்கும்’ என்கிற அந்தக் கட்டுரை இப்படித் தொடங்குகிறது. ‘தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை கணக்கு வாத்தியார்’. கணிதம் கற்பித்தலில் உள்ள சிக்கல்களைத் தொடக்க வகுப்பு முதலே துப்புரவாக அகற்ற வேண்டும் என்பதுதான் அந்தக் கட்டுரையின் சாரம்.
இக்கட்டுரை தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை எழுதினேன். அதற்குப் பல்வேறு ஆளுமைகளிடமிருந்து வந்த பின்னூட்டங்கள், இந்தப் பிரச்சினையின் பல்வேறு கோணங்களை வெளிப்படுத்தின. பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவர், “பல நேரங்களில் ஆசிரியர்களின் ஆளுமை, நட்பு, கனிவு போன்றவை அந்த ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தின் மீதான விருப்பமாக மாணவர்களுக்கு மாறிவிடுகிறது” எனச் சுட்டிக்காட்டினார்.