

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 2025 மே 4இல் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில், உலகின் முதல் மரபணு திருத்தப்பட்ட (Genome-edited) நெல் வகைகளை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சௌகான் வெளியிட்டார். ‘மைனஸ் 5, பிளஸ் 10’ என்கிற புதிய நெல் சாகுபடித் திட்டம் உருவாக்கப்படுவதாகவும், இது நாட்டின் வேளாண் கொள்கையில் ஒரு முக்கியத் திருப்பமாக அமையும்' என்றும் அப்போது அவர் கூறினார்.
இத்திட்டத்தின்கீழ் நெல் சாகுபடிப் பரப்பளவில் 5 மில்லியன் ஹெக்டேர் (மி.ஹெ.) அளவைக் குறைத்துக்கொண்டு, அதன் உற்பத்தி 10 மில்லியன் டன்னாக அதிகரிக்கப்படும்; நெல் சாகுபடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 மி.ஹெ. பரப்பளவை - இந்தியா நீண்ட காலமாக இறக்குமதியைச் சார்ந்துள்ள - எண்ணெய் வித்துகள், பருப்புப் பயிர்கள் ஆகியவற்றைப் பயிரிடுவதற்குப் பயன்படுத்துவதே இதன் அடிப்படை நோக்கம்.