

குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து நம்மில் பலரும் மிக மேலோட்ட மாகவே புரிந்துகொண்டுள்ளோம். நேரடியான தாக்குதல்கள் நிகழாதவரை அப்படியொரு சூழல் நம் நாட்டில் இல்லை என்றே போலியாக நம்ப விரும்புகிறோம். ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. ஒவ்வொரு நாளும் எண்ணற்ற குழந்தைகள் நம் நாட்டில் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். அவர்களில் வெகுசிலரே வெளியே சொல்கிறார்கள். அரிதான நிலையில்தான் குற்ற வழக்குகள் பதிவாகின்றன.
குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு ஒப்பீட்டளவில் நீண்ட காலம் ஆகிறது. இந்த நிலைக்கு நம்முடைய குடும்ப, சமூக அமைப்பே முதன்மையான காரணம். இன்னொருபுறம், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) நம்முடைய வாழ்வின் அங்கமாக மாறிவருகிறது. மெய்நிகர் உலகில் (Virtual World) நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் மிகக் குறைவாகவே உள்ளது.