

பட்டினிச் சாவு என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியாது. சென்ற தலைமுறையில் எங்கோ நடப்பதாகக் கேள்விப்பட்டார்கள். அதற்கு முந்தைய தலைமுறை பட்டினிச்சாவை நேரில் கண்டிருக்கிறது.பெரும் பஞ்சத்தைச் சந்தித்து மீண்டிருக்கிறது. பஞ்சத்தின் கதை என்பது பட்டினிச் சாவின் கதைதானே.
1943இல் பிரிட்டிஷ்காரர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட வங்கப்பஞ்சம் மூன்று மில்லியன் மக்களைக் காவு வாங்கியது. அந்தப் பஞ்ச காலத்தில் வங்காளத்தின் சிறுகிராமம் ஒன்றில் வாழும் அனங்கா குடும்பத்தின் கதையைத்தான் ‘நெருங்கி வரும் இடியோசை’ நாவல் பேசுகிறது. ‘பதேர் பாஞ்சாலி’ நாவலை எழுதிய பிபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் கடைசி நாவல் இது. அவரது மறைவிற்கு பின்பு அவரது மனைவியின் முன்னுரையோடு நாவல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. புகழ்பெற்ற இயக்குநர் சத்யஜித்ரே இந்த நாவலையும் படமாக்கியிருக்கிறார்.