

இந்தியாவில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களைவிட அமைப்பு சாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கைதான் அதிகம். அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் ஏராளம். இந்தச் சூழலில் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான சட்டங்கள், பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து அமைப்பு சாராத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகரும் அவர்களுக்காக நீண்ட காலமாகப் போராடிவருபவருமான இரா.கீதா அளித்த பேட்டி:
உள்நாட்டு உற்பத்தியில் 65% பங்களிப்பு வழங்கக்கூடிய அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன? - சொல்லிக்கொள்ளும் விதத்தில் இல்லை என்பதுதான் உண்மை. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எந்த அமைப்பிலும் இல்லாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். அவர்களுக்குப் போதுமான விழிப்புணர்வும் இல்லை. தமிழ்நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர் கூட்டமைப்பு இருக்கிறது. இந்திய அளவிலும் தற்போது உருவாக்கி வருகிறோம். இன்னமும் பல தொழிலாளர்கள் தனித்தனியாக இயங்கி வருகிறார்கள். மொத்தமாகச் செயல்படுவதற்குத் தேசிய அளவில் ஒருங்கிணைப்பு தேவை.