

மகாபாரதம், போருடன் முடிவடைவதில்லை. அது குருஷேத்திரப் போருக்குப் பின்பாகப் பாண்டவர்கள் எப்படி ஆட்சிசெய்தார்கள். அவர்களின் இறுதி நாட்கள் எப்படியிருந்தன என்பதையும் பேசுகிறது. அது தான் இதிகாசகத்தின் சிறப்பு. நீர்க்குமிழி போன்றதே வாழ்க்கை என்பதை இதிகாசம் தெளிவாக உணர்த்துகிறது.
வியாச மகாபாரதத்தின் பதினேழாவது பர்வமான மகாபிரஸ்தானிகம், பாண்டவர்-திரௌபதியின் இறப்பினை விவரிக்கிறது. மேரு மலை நோக்கிச் செல்லும்போது திரௌபதி தடுமாறி விழுந்து இறக்கிறாள். பின் சகாதேவன், நகுலன், அர்ச்சுனன், பீமன் என ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள். யுதிஷ்டிரன் மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்கிறார். அவருடன் ஒரு நாயும் செல்கிறது. அது தர்மதேவதையின் உருவம். இதிகாச நாயகர்களின் வீழ்ச்சியைக் காணுவது துயரமானது. ஒரு மனிதனின் வெற்றிக்கான காரணங்களைக் கண்டறிந்துவிட முடியும். ஆனால், வீழ்ச்சியின் காரணங்களைக் கண்டறிய முடியாது.