

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்காகத்தான் மனித உடல் புலனுலகத்தை ஏற்படுத்திக்கொள்கிறது. அதாவது ஓர் ஆபத்து தன்னை நோக்கி வருகிறது என்றால், எவ்வளவு வேகமாக ஓட வேண்டும் அல்லது தனக்குத் தேவையான ஒரு பொருள், தான் வேட்டையாடும் விலங்கு எவ்வளவு தொலைவில் இருக்கிறது; அதனை அடைய எவ்வளவு ஆற்றலைச் செலவிட்டு ஓட வேண்டும் என்பன போன்றவற்றைத் தீர்மானம் செய்வதற்காக ஆற்றலைக் காலமாகவும், காலத்தை இடமாகவும் காட்சிப்படுத்தும் புலனுலகம் உருவாகிறது.