

ஓர் ஆடம்பர மாளிகையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். விருந்து முடிந்து நீண்ட நேரம் கழிந்த பிறகும் ஒருவராலும் அந்த வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. கதவுகள் பூட்டப்பட்டிருக்கவில்லை என்றாலும், ஒருவராலும் திறக்க முடியவில்லை. வீடு திரும்ப வேண்டும் என்று துடிக்கிறார்கள். யாரும் அவர்களைத் தடுக்கவும் இல்லை. ஏன் இப்படி இங்கே அடைந்து கிடக்கிறோம் என்று ஒருவருக்கும் புரியவில்லை.
நெரிசல் அதிகரிக்கிறது. மோதல் வெடிக்கிறது. தண்ணீருக்குத் தட்டுப்பாடு. குழப்பமும் அச்சமும் அவநம்பிக்கையும் பகையும் பிய்த்துத் தின்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் லூயி புனுவல் எழுதி, இயக்கிய திரைப்படம் (The Exterminating Angel) இணையத்தில் ‘ஆபரா’வாக வெளிவந்தபோது அடைந்து கிடந்த வீட்டுக்குள் இருந்தபடி அதைப் பார்த்தவர்களால் அந்த விசித்திரமான சூழலோடு சுலபமாக ஒன்றிப்போக முடிந்தது.