

காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்கிறதா அல்லது கால ஈக்கள் அம்பினை விரும்புகின்றனவா என்று செய்மெய்யும் நானும் செய்துகொண்டிருந்த விதண்டாவாதத்தை ஒரு கணத்தில் நிறுத்திவிட்டோம். “நாம் இதை வீட்டிலிருந்து விவாதிக்க வேண்டாம். மாமல்ல புரத்துக்குப் பக்கத்தில் ஒரு ‘மொழி அருங்காட்சியகம்’ இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?” என்று கேட்டது செய்மெய்.
“வேர்ட்ஸ் அண்ட் வேர்ல்ட்ஸ் தானே?” “ஆமாம். அங்கே போவோம்” என்றது செய்மெய். இந்தக் காலத்தில் எல்லாவற்றையும் மெய்நிகர் வெளியிலேயே கற்றுக்கொள்ளலாம் என்றாலும், மனிதர்கள் இன்னமும் கல்லூரிகளையும் அருங்காட்சியகங்களையும் புத்தகக் கடைகளையும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.