

பெரு நாட்டின் பிரபல எழுத்தாளர் மாரியோ பார்காஸ் லியோசா (Mario Vargas Llosa) கடந்த வாரம் தலைநகர் லீமாவில் தன்னுடைய 89 ஆவது வயதில் காலமாகிவிட்டார். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற லியோசா, கொலம்பியா நாட்டு கப்ரியேல் கார்சியா மார்க்கெஸோடு (Gabriel Garca Mrquez) ஒப்பிடப்படுபவர். இலக்கியத் தாக்கத்தைப் பொறுத்தவரை, லியோசா அவரையும் பின்னுக்குத் தள்ளியவர் என்றும் விமர்சகர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.
லியோசா, பெருவில் ஆரெகிப்பா என்ற ஊரில் பிறந்தவர். பிறந்த சில நாட்களிலேயே அவர் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டார்கள். பத்து வயது வரை அவர் தாய்வழிக் குடும்பம் ஒன்றால் வளர்க்கப்பட்டார். அவர், தன் தந்தை இறந்துவிட்டார் என்றே நினைத்துக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு நாள் அவர் பெற்றோர் மீண்டும் இணையும்போது, அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவருடைய தந்தையின் கண்டிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது. சிறு வயதிலேயே தன் மகனுக்கிருந்த இலக்கிய ஆர்வத்தைக் கண்டுகொள்ளாமல், அவர் தன் மகனை ராணுவப் பள்ளியில் சேர்த்துவிடுகிறார். தன்னுடைய இலக்கிய ஆர்வம் குன்றிவிடப் போகிறது என்று நினைத்த லியோசா தனக்கேற்பட்ட அனுபவத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். ராணுவப்பள்ளியை வைத்தே அவர் நாவல் எழுத ஆரம்பித்தார்.