

2001 செப்டம்பர் 11இல் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தகக் கட்டிடமான இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட போது, உலகமே அமெரிக்காவுக்குத் துணைநின்றது. இன்று, உலக நாடுகள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள இறக்குமதிக்கான தீர்வை, பல உலக நாடுகளை இணைத்து இத்தனை காலமாகக் கட்டி அமைத்திருந்த உலக வர்த்தக அமைப்பை அதுவே தகர்த்துவிட்டதோ என எண்ண வைக்கிறது. மற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
குமுறும் வல்லரசு: கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளிநாட்டு வணிகப் பரிவர்த்தனையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் சமநிலை இல்லாமல், செலவு பல மடங்கு அதிகமாக உள்ளது. ஒரு நாட்டின் இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறையும்போது, இந்நிலை ஏற்படுகிறது.